Friday, May 4, 2018

சாய் சத்சரிதம் அத்தியாயம் 50 (51)

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 50
காகா சாஹேப் தீஷித்
ஸ்ரீ தேம்பே ஸ்வாமி
பாலாராம் துரந்தர்
ஆகியோரின் கதைகள்

சத்சரிதம் மூலநூலில் ஐம்பதாவது அத்தியாயத்தின் மையப்பொருள் 39ஆம் அத்தியாயத்தில் உள்ள அதே மையப் பொருளைப் பற்றியது. ஆதலால் இந்த அத்தியாயத்துடனேயே இணைக்கப்பட்டிருக்கிறது. இப்போது 51வது அத்தியாயம் இங்கே 50ஆம் அத்தியாயமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த அத்தியாயம் காகா சாஹேப் தீஷித், ஸ்ரீ தேம்பே ஸ்வாமி, பாலாராம் துரந்தர் ஆகியோரின் கதைகளைக் கூறுகிறது.

முன்னுரை

பக்தர்களின் மூலாதாரமும், சத்குருவும், கீதையை விளக்குபவரும், நமக்கு எல்லா ஆற்றல்களையும் கொடுப்பவருமான சாயிக்கு ஜெயம் உண்டாகட்டும். ஓ! சாயி, எங்களுக்கு அனுகூலம் செய்து ஆசீர்வதியுங்கள். மலயகிரியில் வளரும் சந்தன மரங்கள் உஷ்ணத்தைப் போக்குகின்றன. மேகங்கள் மழைநீரைப் பொழிந்து மக்களைக் குளிர்வித்து புத்துணர்வூட்டுகின்றன. வசந்தகாலத்தில் மலர்கள் மலர்ந்து அவைகளால் நாம் கடவுளை வழிபட வகை செய்கின்றன. அது போலவே சாயிபாபாவின் கதைகள் பயில்வோருக்குச் சாந்தியையும், சௌகரியத்தையும் அளிக்க முன்வருகின்றன. பாபாவின் கதைகளை எடுத்துக் கூறுவோர், அதைக் கேட்போர் இருபாலரும் மற்றும் முன்னவர்களின் வாக்கும், பின்னவர்களின் காதுகளும் ஆசீர்வதிக்கப்பட்டுப் புனிதம் அடைகின்றன.

நூற்றுக்கணக்கான பயிற்சிகளையும் செயல்முறைகளையும் நாம் கடைப்பிடித்தும், ஒரு சத்குரு அவர்தம் அருளால் நம்மை ஆசீர்வதித்தாலன்றி, நாம் ஆன்மிக இலட்சியத்தை அடையமாட்டோம். இந்த வாக்கிற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் கதையினைக் கேளுங்கள்.

காகா சாஹேப் தீஷித் (1864 - 1926)

ஹரி சீதாராம் என்னும் காகா சாஹேப் தீஷித் 1846ல் வத்நாகர நகர், காண்ட்வாவில் (மத்திய மாகாணம்) பிராமணக் குடும்பத்தில் அவதரித்தார். அவர் ஆரம்பக் கல்வி காண்ட்வா, ஹிங்கான்காட் என்னும் ஊர்களிலும், நடுத்தரக் கல்வி நாக்பூரிலும் பயின்றார். மேற்படிப்புக்காக பம்பாய் வந்து வில்ஸன் கல்லூரியில் முதலிலும், பின்னர் எல்பின்ஸ்டன் கல்லூரியிலும் பயின்றார். 1883இல் பட்டம் பெற்ற பிறகு அவர் L.L.B. யிலும் வக்கீல் பரீட்சையிலும் தேறி, அரசு தரப்பு வக்கீல்களின் லிட்டில் & கம்பெனி என்ற நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, சிறிது காலத்திற்குப்பின் தாமே சொந்தமாக வழக்குரை அறிஞர்கள் நிறுவனத்தைத் தொடங்கினார்.

1909ஆம் ஆண்டுக்கு முன்னர் சாயிபாபாவின் பெயர், காகா சாஹேப் தீஷித்துக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் அதற்குப்பின் அவர் பாபாவின் ஒரு பெரும் பக்தராக ஆனார். லோனாவாலாவில் தங்கியிருந்தபோது தனது பழைய நண்பரான நானா சாஹேப் சாந்தோர்கரைச் சந்திக்க நேர்ந்தது. பல விஷயங்களைப் பற்றிப் பேசுவதில் இருவரும் சிறிதுநேரத்தைச் செலவழித்தனர். காகா சாஹேப், தாம் லண்டனில் ஒரு டிரெயினில் போய்க்கொண்டிருக்கும்போது எங்ஙனம் ஒரு விபத்து நேரிட்டு தனது பாதம் நழுவிக் காயமடைந்தார் என்று அவருக்கு விளக்கினார். நூற்றுக்கணக்கான சிகிச்சைகள் செய்தும் எதுவும் அவருக்குப் பலனை அளிக்கவில்லை.

நானா சாஹேப் அவரிடம் அவர்தம் காலின் ஊனத்தையும், வழியையும் நீக்கிக்கொள்ள விரும்பினால் தனது சத்குரு சாயிபாபாவிடம் செல்லவேண்டும் என்றார். மேலும் சாயிபாபாவைப்பற்றிய முழு விபரத்தையும் அவர் காகாவுக்குக் கொடுத்து சாயிபாபாவின் மஹாவாக்கியமான "எனது மக்களை நெடுந்தொலைவிலிருந்தும், ஏழ்கடலுக்கு அப்பாலிருந்தும் கூட குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போன்று இழுக்கிறேன்" என்பதைக் கூறினார்.

பாபாவின் ஆளாயில்லாவிட்டால் அவர் பாபாவால் கவரப்படமாட்டார் என்பதையும், தரிசனம் அளிக்கப்படமாட்டார் என்பதையும் அவர் தெளிவாக்கினார். இவைகளையெல்லாம் கேட்க காகா சாஹேபுக்கு மகிழ்வுண்டாயிற்று. தாம் பாபாவிடம் போவதாகவும், அவரைத் தரிசித்துப் பிரார்த்தித்து கால் ஊனத்தை அவ்வளவாக குணமாக்காவிடினும் ஊனமான ஒட்டித்திரியும் மனத்தை ஒழுங்காக குணப்படுத்தி தமக்கு எல்லையற்ற பேரின்பத்தை நல்கும்படியும் வேண்டிக்கொள்ளப் போவதாகவும் கூறினார்.

காகா சாஹேப் தீஷித் சில நாட்களுக்குப் பிறகு பம்பாய் கீழ் சட்டசபையில் தமக்கு ஒரு இடம் கிடைப்பதற்காக, ஓட்டுக்கள் பெறும் நோக்குடன் அஹமத்நகர் சென்று சர்தார் காகா சாஹேப் மிரீகருடன் தங்கினார். காகா சாஹேப் மிரீகருடைய புதல்வரான பாலா சாஹேப் மிரீகர் என்னும் கோபர்காவனின் மம்லதார், அச்சமயத்தில் அஹமத்நகருக்கு அவ்விடத்தில் நடைபெற்ற குதிரைக் கண்காட்சியைக் காணும்பொருட்டு வந்தார். தேர்தல் வேலை முடிந்ததும் காகா சாஹேப் தீஷித் ஷீர்டி செல்ல விரும்பினார். தந்தையும், மகனுமாகிய இரு மிரீகர்களும், அவருடன் அனுப்புவதற்கு ஒரு தகுதியான, ஒழுங்கான வழிகாட்டியாக யாரை அனுப்பலாம் என்று தங்கள் இல்லத்தில் யோசித்துக்கொண்டிருந்தனர்.

ஷீர்டியில் சாயிபாபா அவர்களின் வரவேற்புக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். ஷாமாவுக்கு அவரின் மாமனாரிடமிருந்து ஷாமாவின் மாமியார் தீவிரமாகக் காய்ச்சலாக இருப்பதையும், ஷாமா தனது மனைவியுடன் அவளைக் காண அஹமத்நகர் வரவேண்டுமென்றும் ஒரு தந்தி வந்தது. ஷாமா பாபாவின் அனுமதியுடன் அங்கு வந்து தனது மாமியார் முன்னைவிட இப்போது நலமாகி வருவதைக் கண்டார். நானா சாஹேப் பான்சேயும், அப்பா சாஹேப் கத்ரேயும் அவர்கள் குதிரைக் கண்காட்சிக்குப் போகும்வழியில் ஷாமாவைக் கண்டு, அவரை மிரீகரின் வீட்டுக்குச் சென்று காகா சாஹேப் தீஷித்தைப் பார்த்து ஷீர்டிக்கு அவரையும் உடனழைத்துச் செல்லும்படி கூறினார்கள். காகா சாஹேப் தீஷித்துக்கும், மிரீகர்களுக்கும் கூட ஷாமாவின் வருகை தெரிவிக்கப்பட்டது. மாலையில் ஷாமா மிரீகர்களிடம் வந்தார். அவரை அவர்கள் காகா சாஹேப் தீஷித்துக்கு அறிமுகப்படுத்தினர்.

ஷாமா, காகா சாஹேப் தீஷித்துடன் இரவு 10 மணி ரயில் வண்டியில் கோபர்காவனுக்குச் செல்வதென ஏற்பாடு செய்யப்பட்டது. இது முடிவானதும் ஒரு விசித்திர நிகழ்ச்சி நடைபெற்றது. பாலா சாஹேப் மிரீகர் பாபாவின் படத்தின்மீது இருந்த திரையை அகற்றிவிட்டு அதை காகா சாஹேப் தீஷித்துக்குக் காண்பித்தார். யாரைப் பார்க்க ஷீர்டிக்குப் போகப் போகிறாரோ அவர் அவ்விடத்திலேயே தமது சித்திர ரூபத்தில் வரவேற்க இருந்ததைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார். அவர் மிகவும் மனமுருகி படத்தின்முன் வீழ்ந்துபணிந்தார். அப்படம் மேகாவுடையது. அதன்மேல் உள்ள கண்ணாடி உடைந்துவிட்டதால், பழுதுபார்க்க அது மிரீகர்களிடம் அனுப்பபட்டிருந்தது. தேவையானபடி பழுது பார்க்கப்பட்டு விட்டபடியால் படத்தை இப்போது ஷாமாவிடமும், காகா சாஹேபுடனும் அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது.

பத்து மணிக்கு முன்னரே அவர்கள் ரயில் நிலையத்துக்குச் சென்று நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டனர். ஆனால் வண்டி வந்ததும் இரண்டாம் வகுப்பு மிகவும் கூட்டமாக இருப்பதையும், அவர்களுக்கு இடமில்லாதிருப்பதையும் அறிந்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த வண்டியின் கார்டு, காகா சாஹேபின் நண்பராக இருந்தார். அவர்களை முதல் வகுப்பில் அமர்த்தினார். இவ்வாறாக அவர்கள் சௌக்கியமாகப் பிரயாணம் செய்து கோபர்காவனில் இறங்கினார்கள். ஷீர்டிக்குச் செல்ல நானா சாஹேப் சாந்தோர்கரும் அங்கு வந்திருப்பதை அவர்கள் கண்டபோது அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.

காகா சாஹேபும், நானா சாஹேபும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். பிறகு புனித கோதாவாரியில் நீராடிய பின்னர் அவர்கள் ஷீர்டிக்குப் புறப்பட்டனர். அங்கு போய்ச்சேர்ந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றவுடன் காகா சாஹேபின் மனது உருகியது. அவர் கண்கள் குளமாயின. அவர் மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கடிக்கப்பட்டார்.
பாபா அவரிடம் தாம்கூட அவருக்காகவே காத்துக்கொண்டிருப்பதாகவும், அவரை வரவேற்பதற்காகவே ஷாமாவை முன்னால் அனுப்பியதாகவும் கூறினார்.

பின்னர் காகா சாஹேப் பல சந்தோஷமான வருடங்களை பாபாவின் கூட்டுறவில் கழித்தார். ஷீர்டியில் அவர் ஒரு வாதா(சத்திரம்) கட்டினார். ஏறக்குறைய அதையே நிரந்தர வாசஸ்தலமாக ஆக்கிக்கொண்டார். பாபாவிடமிருந்து அவர் பெற்ற அனுபவங்கள் எண்ணற்றவையாதலால் அவைகளை எல்லாம் கூறுவதற்கு இங்கு இடமில்லை. இது குறித்து சாயிலீலா சஞ்சிகை (தொகுப்பு 12, எண் 6,7,8,9) 'காகா சாஹேப் தீஷித்" சிறப்புமலரைப் பார்க்குமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஒரே ஒரு உண்மையைக் கூறி இந்த விஷயத்தை முடித்துக் கொள்கிறோம். பாபா அவரை "நான் உன்னை புஷ்பக விமானத்தில் எடுத்துச் செல்கிறேன்" என்று கூறியிருந்தார். (அதாவது மகிழ்வான மரணத்தை அவருக்குக் கொடுத்தல்) இது உண்மையாயிற்று. 1926ஆம் வருடம் ஜூலை மாதம் 5ஆம் தேதி அவர் ஹேமத்பந்துடன் ரயிலில் செல்லும்போது சாயிபாபாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவர் நினைவிலேயே ஆழ்ந்திருந்தார். திடீரெனத் தமது கழுத்தை ஹேமத்பந்தின் தோள்களில் சாய்த்து எவ்வித வலியோ, அசௌகரியமோ இன்றிக் காலமானார்.

ஸ்ரீ தேம்பே ஸ்வாமி

ஞானிகள் ஒருவருக்கொருவர் சகோதர பாசத்துடன் எங்ஙனம் நேசித்துக்கொள்கிறார்கள் என்பதை விளக்கும் அடுத்த கதைக்கு வருவோம். ஸ்ரீ வாசுதேவானந்த் சரஸ்வதி என்ற தேம்பே ஸ்வாமி என்பார் ஒருமுறை ஆந்திராவில் கோதாவரிக் கரையிலுள்ள ராஜமஹேந்திரியில் வந்து தங்கியிருந்தார். அவர் பக்தியும் வைதீகமும் உடைய ஞானியாகவும், யோகியாகவும் இறைவனாகிய தத்தாத்ரேயரின் பக்தருமாக விளங்கிவந்தார். நிஜாம் ராஜ்யத்தைச் சேர்ந்த நாந்தேட் நகரின் வக்கீலான ஸ்ரீ புண்டலிக்ராவ் என்பவர் சில நண்பர்களுடன் அவரைக் காணச் சென்றிருந்தார். அவர்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஷீர்டி, சாயிபாபா முதலிய பெயர்கள் தற்செயலாக அப்பேச்சின்போது கூறப்பட்டன.

பாபாவின் பெயரைக் கேட்டதும், ஸ்வாமி கைகளால் வணங்கி ஒரு தேங்காயை எடுத்து அதை புண்டலிக்ராவிடம் கொடுத்து, "என் வணக்கங்களுடன் சகோதரர் சாயியிடம் இதைச் சமர்ப்பித்து விடுங்கள். என்னை மறந்துவிடாமல் என்மேல் அன்புடனிருக்கச் சொல்லுங்கள்" என்றார். மேலும் "ஸ்வாமிகள் பொதுவாக யாரையும் வணங்குவதில்லை. ஆனால் இந்த விஷயத்தில் இந்த விதி விலக்குச் செய்யப்படவேண்டும்" என்றும் கூறினார். புண்டலிக்ராவ் தேங்காயையும், செய்தியையும் பாபாவிடம் எடுத்துச்செல்லச் சம்மதித்தார். பாபாவைச் சகோதரன் என்று இந்த ஸ்வாமி அழைப்பது சரியே. ஏனெனில் அவருடைய வைதீக சம்பிரதாயப்படி அக்னிஹோத்ரம் என்ற புனித நெருப்பை இரவும், பகலும் அவர் காத்துவந்ததைப் போலவே பாபாவும் அக்னிஹோத்ரத்தை அதாவது துனியை மசூதியில் எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருந்தார். ஒரு மாதத்திற்குப் பின்னர் புண்டலிக்ராவும் மற்றவர்களும் தேங்காயுடன் ஷீர்டிக்குப் புறப்பட்டு மன்மாடை வந்தடைந்தனர். தாகமாக இருந்ததால் ஓர் ஓடைக்குத் தண்ணீர் பருகச் சென்றனர். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கக் கூடாதாகையால் கொஞ்சம் சிவடா என்ற காரம் கலந்த அவலை சிற்றுண்டியாக உட்கொண்டனர். அது அதிகக் காரமாக இருந்ததால் யாரோ ஒருவர் தேங்காயை உடைத்து தேங்காய்ப்பூவை அதனுடன் கலந்துவிடலாம் என்று கூறி அதேபோல் செய்தும் விட்டார். சிவடாவை அதிகச் சுவையுள்ளதாகவும், நாவுக்கு ருசியுள்ளதாகவும் செய்துகொண்டனர். துரதிர்ஷ்டவசமாக அந்தத் தேங்காய் புண்டலிக்ராவிடம் ஒப்படைக்கப்பட்ட தேங்காயாக இருந்தது.

அவர்கள் ஷீர்டியை நெருங்கியதும் புண்டலிக்ராவ், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகிய தேங்காய் உடைக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை வெகுவருத்ததுடன் அறிந்தார். பயந்து நடுங்கிக்கொண்டு ஷீர்டிக்கு வந்து சாயிபாபாவைப் பார்த்தார். பாபா முன்னமேயே தேம்பே ஸ்வாமி தேங்காய் அனுப்பியுள்ள கம்பியில்லாத் தந்தியின் செய்தியைப் பெற்றுவிட்டார்.
பாபா தாமாகவே தமது சகோதரன் கொடுத்தனுப்பியுள்ள பொருளை முதலில் கொடுக்கும்படி புண்டலிக்ராவிடம் கேட்டார். அவர் பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு தமது குற்றத்தையும் கவனமின்மையையும் கூறி, மனம் வருந்தி பாபாவின் மன்னிப்பை வேண்டினார். மற்றொரு தேங்காயை அதற்குப் பதிலாகக் கொடுத்துவிடுவதாகக் கூறினார். ஆனால் அத்தேங்காய்க்கு இணையாக வேறொன்றை ஈடுசெய்ய முடியாதென்றும், சாதாரணக் காயைக் காட்டிலும் பல மடங்கு அது உயர்ந்ததென்றும் கூறி பாபா அதைப் பெறுவதற்கு மறுத்துவிட்டார். மேலும் பாபா கூறினார், "இனிமேல் இவ்விஷயத்தைப்பற்றி நீ கவலைகொள்ளத் தேவையில்லை. எனது விருப்பத்தின் காரணமாகவே தேங்காய் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டு முடிவில் உடைக்கப்பட்டும் விட்டது. செயல்களின் கர்த்தாவாக உன்னையே ஏன் நீ ஆக்கிக்கொள்கிறாய்?
நற்கருமங்களையோ அல்லது தீய செயல்களையோ செய்யும் கர்த்தாவாக உன்னை நீயே எண்ணிக்கொள்ளும் உணர்வை அனுமதிக்காதே. எல்லாவற்றிலும் முழுமையாக அஹங்காரமற்று இரு. அதனால் உனது ஆன்மிக முன்னேற்றம் துரிதமடையும்" என்றார். எத்தகைய அழகிய ஆன்மிக போதனையை இந்நிகழ்ச்சியின் மூலம் பாபா உணர்த்தியிருக்கிறார்!

பாலாராம் துரந்தர் (1878 - 1925)

பாலாராம் துரந்தர், பம்பாய் சாந்தாகுருசைச் சேர்ந்த பதாரே பிரபு இனத்தைச் சேர்ந்தவர். அவர் பம்பாய் ஹைகோர்ட்டின் வக்கீலாகவும், சிறிது காலம் பம்பாய் அரசாங்க சட்டப்பள்ளியின் (Law School) தலைவராகவும் பணியாற்றினார். துரந்தர் குடும்பம் முழுவதுமே தெய்வபக்தியும், மத உணர்வும் கொண்டது. பாலாராம் தனது இனத்தாருக்குச் சேவை செய்தார். அதைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதி அதைப் பதிப்பித்தார்.

பின்னர் அவர் ஆன்மிக மத விஷயங்களுக்கு திரும்பினார். கீதையையும், அதற்கான வியாக்கியானமான ஞானேஸ்வரியையும், மற்ற தத்துவ நூல்களையும், நுண்ணியல் கோட்பாட்டு நூல்களையும் ஆழ்ந்து படித்தார். அவர் பண்டரீபுரத்து விட்டோபாவின் பக்தர். பாபாவுடன் 1912ல் தொடர்பு கொண்டார். அதற்கு ஆறு மாதங்களுக்குமுன் பாபுல்ஜி, வாமன்ராவ் என்ற அவரின் இரு சகோதரர்களும் ஷீர்டிக்கு வந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றனர். வீடு திரும்பி அவர்களின் இனிய அனுபவங்களை பாலாராமுக்கும், குடும்பத்தினருக்கும் எடுத்துரைத்தனர். அதன் பின்னர் அவர்களெல்லோரும் சாயிபாபாவைத் தரிசிக்கத் தீர்மானித்தார்கள்.

அவர்கள் ஷீரடிக்கு வரும்முன்னரே பாபா வெளிப்படையாக "இன்று எனது தர்பாரைச் சேர்ந்த பெருபாலோர் வருகிறார்கள்" என உரைத்தார். துரந்தர் சகோதரர்கள் முன்கூட்டியே செய்தி ஏதும் அனுப்பவில்லையாதலால், மற்றவர்களிடமிருந்து பாபா கூறிய இக்குறிப்பைக் கேட்டு ஆச்சரியமடைந்தனர். மற்றவர்கள் எல்லோரும் பாபாவின் முன் வீழ்ந்து வணங்கி அவருடன் உரையாடிக் கொண்டிருந்தனர். பாபா அவர்களிடம் "நான் முன்னரே குறிப்பிட்ட எனது தர்பார் மக்கள் இவர்களே" எனக்கூறி, துரந்தர் சகோதரர்களிடம் "கடந்த அறுபது தலைமுறைகளாக நாம் ஒருவரோடொருவர் உறவுபூண்டு இருக்கிறோம்" என்றார். அச்சகோதரர்கள் எல்லோரும் எளிமையுடனும், பணிவுடனும் உற்றுப் பார்த்தவண்ணம் நின்றிருந்தனர். கண்ணீர், தொண்டை அடைத்தல், மயிர்க்கூச்செறிதல் முதலான எல்லா சத்துவ உணர்வுகளும் அவர்களை உருக்கின.

அவர்களெல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் தங்களது இருப்பிடத்துக்குச் சென்று உணவு உட்கொண்டு சிறிது களைப்பாறிவிட்டு மீண்டும் மசூதிக்கு வந்தனர். பாபாவுக்கு, பாலாராம் அமர்ந்து அவரது கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். சில்லிம் என்ற மட்குழாயில் புகை பிடித்துக்கொண்டிருந்த பாபா, அதை அவரிடம் நீட்டி புகை பிடிக்குமாறு அழைத்தார். புகைபிடித்து வழக்கமில்லை எனினும், பாலாராம் அக்குழாயை வாங்கிக்கொண்டு பெருஞ்சிரமத்துடன் புகைபிடித்துவிட்டு, பக்தியுடன் வணங்கி அதைத் திருப்பி அளித்தார். பாலாராமுக்கு இதுவே மிகமிகப் புனிதமான நேரம். ஆறு ஆண்டுகளாக அவர் ஆஸ்துமாவால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். இப்புகை அவரை முழுவதுமாகக் குணப்படுத்தியதுடன் மீண்டும் அவ்வியாதிக்கு உட்படுத்தவேயில்லை. ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஒரு குறிப்பிட்ட தினத்தில் மீண்டும் அவருக்கு ஆஸ்துமாவின் தாக்குதல் நேரிட்டது. இது பாபா மஹாசமாதி அடைந்த அதே நேரமாகும்.

அவர்கள் சென்றிருந்த தினம் வியாழக்கிழமையாதலால் துரந்தர் நண்பர்கள் சாவடி ஊர்வலத்தை அன்று இரவு கண்டுகளிக்கும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தனர். சாவடியில் ஆரத்தி நிகழ்ச்சியின்போது பாலாராம் பாபாவின் முகத்தில் பாண்டுரங்கரின் ஜோதியைக் கண்டார். மறுநாள் காலை காகட் ஆரத்தியின்போதும் அதே அபூர்வ நிகழ்ச்சியை, அதாவது அவரின் அன்புக்குரிய தெய்வமான பாண்டுரங்கரின் ஜோதி பாபாவின் முகத்தில் ஒளிர்ந்ததைக் கண்டார்.

பாலாராம் துரந்தர் மராத்தியில் மகாராஷ்ட்ர ஞானி துகாராமின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதினார். ஆனால், அதன் பதிப்பைக் காண அவர் உயிருடனிருக்கவில்லை. பின்னர் 1928இல் அவரது சகோதரர்களால் பிரசுரிக்கப்பட்டது. பாலாராமின் வாழ்க்கையைப்பற்றிக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சிறுகுறிப்பு அந்நூலின் ஆரம்பத்தில் உள்ளது. பாலாராமைப் பற்றிய மேற்கூறிய தகவல் அதில் முழுவதுமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
(அந்தப் புத்தகத்தின் 6ம் பக்கத்தில் காண்க)

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

சாய் சத்சரிதம் அத்தியாயம் 49

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 49
ஹரி கானோபா
ஸோமதேவ் ஸ்வாமி
நானா சாஹேப் சாந்தோர்கர்
ஆகியோரின் கதைகள்

முன்னுரை

வேதங்களும், புராணங்களும் பிரம்மத்தையோ, சத்குருவையோ போதுமான அளவில் விவரிக்க இயலாது. அவ்வாறெனின் ஏதுமறியாதவர்களாகிய நாம் எங்ஙனம் நமது சத்குரு, சாயிபாபாவை விவரிக்க இயலும்? இவ்விஷயத்தில் அமைதியாக இருப்பதே சிறந்தது என்று எண்ணுகிறோம். உண்மையில் மௌனவிரதம் அனுஷ்டிப்பதே, சத்குருவைப் புகழ்வதற்கு சிறப்பான வழியாகும். ஆனால் சாயிபாபாவினது நல்ல பண்புகள் மௌன விரதத்தை மறக்கச்செய்து நம்மைப் பேசுமாறு ஊக்குவிக்கின்றன. நண்பர்கள், உறவினர்கள் இவர்களும் நம்மோடு இருந்து உண்ணவில்லையாயின் நல்ல ருசியான உணவுகூட நமக்குச் சுவையாக இருப்பதில்லை. ஆனால் அவர்கள் நம்முடன் சேர்ந்து உண்பார்களானால், அவைகள் இன்னும் அதிக சுவையைப் பெறுகின்றன. சாயி லீலைகள் என்ற ரூபத்தில் உள்ள அமிர்தமான சாயி லீலாம்ருதமும் இது போன்றதே. அமிர்தத்தை நாம் மட்டுமே தனியாக உண்ணமுடியாது. நண்பர்களும், சகோதரர்களும் நம்முடன் சேரவேண்டும். எவ்வளவு அதிகமோ அவ்வளவு நலம்.

இக்கதைகளுக்குத் தெய்வீக உணர்ச்சியூட்டுவதும் தம் விருப்பப்படியே அவைகளை எழுதுமாறு செய்வதும் சாயிபாபா அவர்களேயாகும். பரிபூரண சரணாகதியடைவதும், தியானிப்பதும் மட்டுமே நமது கடமை. க்ஷேத்ராடனம், பிரதிக்ஞை, தியாகம், தர்மம் இவை எல்லாவற்றையும்விட தவமிருத்தல் நல்லது. தவமிருத்தலைக் காட்டிலும் ஹரியைத் தொழுவது நலம். இவையெல்லாவற்றையும் விட சத்குருவைத் தியானிப்பது மிகச்சிறந்தது.

ஆகவே சாயியின் நாமத்தை ஸ்மரணம் செய்து அவர் மொழிகளை மனதில் நினைத்து, அவர் உருவைத் தியானித்து, இதயபூர்வமாக அவரிடம் அன்பு செலுத்தி, அவருக்காகவே எல்லாச் செயல்களையும் செய்வோமாக. சம்சார பந்தத்திலிருந்து விடுபட இதைவிட வேறு சிறந்த வழியில்லை. மேலே கூறியவாறு நமது கடமையைச் செய்தோமானால் சாயி நமது விடுதலைக்கு உதவக் கட்டுப்பட்டவர். இப்போது இந்த அத்தியாயத்தின் கதைக்கு வருவோம்.

ஹரி கானோபா

பம்பாயைச் சேர்ந்த ஹரி கானோபா என்பவர் தனது நண்பர்கள், உறவினர்கள் மூலம் பாபாவின் பல லீலைகளைக் கேள்வியுற்றார். அவர் ஒரு சந்தேகப் பிராணியாக இருந்ததால் அவற்றை நம்பவில்லை. அவர் பாபாவைத் தாமே பரீட்சிக்க விரும்பினார். எனவே சில பம்பாய் நண்பர்களுடன் ஷீர்டிக்கு வந்தார். ஜரிகைத் தலைப்பாகையும், காலில் இரண்டு புதிய காலணிகளையும் அணிந்திருந்தார். பாபாவைத் தொலைவிலிருந்து கண்ட அவர், அவரிடம் சென்று வீழ்ந்துபணிய எண்ணினார். அவரது புதிய காலணிகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. எனினும் திறந்தவெளியில் ஒரு மூலைக்குச் சென்று அவைகளை வைத்துவிட்டு, மசூதிக்குள் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்றார்.

பாபாவைப் பக்தியுடன் வணங்கி உதி, பிரசாதம் இவைகளைப் பெற்றுக்கொண்டு திரும்பினார். அங்கு மூலையில் வைத்திருந்த காலணிகள் மறைந்து போயிருந்ததை அவர் கண்டார். அவைகளுக்காக வீணாகத் தேடியபின், தான் இருந்த இடத்துக்கு மிகவும் மனமுடைந்துபோய்த் திரும்பினார். குளித்து வழிபட்டு நைவேத்தியம் சமர்ப்பித்துவிட்டு, உணவுக்காக அமர்ந்தார். ஆயினும் அவ்வளவு நேரமும் காலணிகளைத் தவிர வேறொன்றையும் பற்றி அவர் நினைக்கவில்லை.

உணவை முடித்துக்கொண்டபின், கை கழுவுவதற்காக வெளியே வந்தபோது ஒரு மராத்தியப் பையன் அவரை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவனது கையில் ஒரு கோல் இருந்தது. அதன் நுனியில் ஒரு ஜோடி புதிய காலணிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. கை கழுவ வெளியேவந்த நண்பர்களிடம் பாபா தன்னை இக்கோலுடன் அனுப்பியிருப்பதாகவும், ஹரிகா பேடா ஜரிகா ஃபேடா!' ('க என்பவரின் புதல்வரான ஹரியே! ஜரிகைத் தலைப்பாகைக்காரரே!) என்று கூவிக்கொண்டே வீதிகளில் செல்லும்படி சொல்லியிருப்பதாகவும், யாராவது இக்காலணிகளைக் கேட்டால் அவரது பெயர் ஹரிதானா என்றும் அவர் கவின் (அதாவது கானோபா) புதல்வர்தானா என்றும், அவர் ஜரிகை தலைப்பாகை அணிபவர்தானா என்றும் தன்னை உறுதிப்படுத்திக்கொண்ட பின்பு, அதை அவரிடம் கொடுக்கும்படி கூறியிருப்பதாகவும் சொன்னான். இதைக்கேட்டு ஹரி கானோபா மிகவும் மகிழ்வும், ஆச்சரியமும் அடைந்தார். அவர் பையனிடம் சென்று காலணிகள் தம்முடையவையே என்றார். தனது பெயர் ஹரி என்றும், தாம் கவின் (கானோபா) புதல்வன் என்றும் கூறி ஜரிகைத் தலைப்பாகையையும் காண்பித்தார்.

பையன் திருப்தியடைந்து அவரிடம் காலணிகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டான். தனது ஜரிகைத் தலைப்பாகை வெளியில் அனைவருக்கும் தெரியுமாறு இருந்தது. எனவே பாபாவும் அதைக் கண்டு இருக்கலாம். ஆனால் தன் பெயர் ஹரி என்பதும், கானோபாவின் மகன் என்றும், தான் முதல் முறையாக ஷீர்டிக்கு வந்திருப்பதால் பாபா எங்ஙனம் அறிந்திருக்கக்கூடும் என மனதில் நினைத்து வியந்தார். வேறு எவ்வித குறிக்கோளும் இன்றி பாபாவைச் சோதிக்கும் ஒரே நோக்கத்துடன் மட்டுமே அவர் ஷீர்டிக்கு வந்தார். இந்நிகழ்ச்சியால் பாபா ஒரு மிகப்பெரும் சத்புருஷர் என்று அவர் அறிந்துகொண்டார். அவர் விரும்பியதை அறிந்துகொண்டு திருப்தியுடன் வீடு திரும்பினார்.

சோமதேவ் ஸ்வாமி

பாபாவை சோதிக்கவந்த மற்றொரு மனிதரின் கதையை இப்போது கேளுங்கள். காகா சாஹேபின் சகோதரரான பாயிஜி நாக்பூரில் தங்கியிருந்தார். 1906ம் ஆண்டில் இமயமலை சென்றிருந்தபோது கங்கோத்ரி பள்ளத்தாக்கில் உள்ள உத்தர் காசியில், ஹரித்வாரைச் சேர்ந்த சோமதேவ் ஸ்வாமி என்பாருடன் அறிமுகமானார். இருவரும் ஒருவர் மற்றவரின் பெயரை தங்கள் நாட்குறிப்பேட்டில் எழுதிக்கொண்டனர். ஐந்தாண்டுகளுக்குப்பின் சோமதேவ் ஸ்வாமி, பாயிஜியின் விருந்தினராக நாக்பூருக்கு வந்தார். பாபாவின் லீலைகளைக் கேட்டு மகிழ்வெய்தினார்.

ஷீர்டிக்குச் சென்று பாபாவைக் காண அவருக்கு ஒரு பெரும் ஆசை எழுந்தது. பாயிஜியிடம் இருந்து அறிமுகக் கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டு, ஷீர்டிக்குக் கிளம்பினார். மன்மாட், கோபர்காவன் இவைகளைக் கடந்ததும், ஒரு வண்டியமர்த்திக்கொண்டு ஷீர்டிக்குப் போனார். ஷீர்டிக்கு அருகில் வந்ததும் மசூதியில், இரண்டு உயரமான கொடிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டார். வெவ்வேறு ஞானிகளிடம் வெவ்வேறு விதமான குணாதிசயங்களும், வெவ்வேறு வாழ்க்கை முறைகளும், வெவ்வேறு புறப்பரிவாரங்களும் இருப்பதை நாம் பொதுவாகக் காண்கிறோம். ஆயின் இப்புறச் சின்னங்கள் அந்த ஞானிகளின் தகுதிகளை எடை போடுவதற்கு உகந்த அளவுகோல் ஆகா. ஆனால் சோமதேவ் ஸ்வாமியின் விஷயத்தில், அது வேறு விதமாய் இருந்தது. கொடிகள் பறப்பதை அவர் கண்டவுடனே, "ஞானி ஒருவர், கொடிகள் மீது ஏன் ஆர்வம் வைக்கவேண்டும்? இது துறவையா உணர்த்துகிறது? இது அந்த ஞானி புகழுக்காக ஏங்குவதை அல்லவா உணர்த்துகிறது" என எண்ணினார்.

இவ்வாறாக அவர் தமது ஷீர்டி விஜயத்தை ரத்துச் செய்ய விரும்பி, தாம் திரும்பிப் போவதாக கூட வந்த சக பயணிகளிடம் கூறினார். அவர்கள் அதற்கு, "பின் இவ்வளவு தூரம் நீங்கள் ஏன் வரவேண்டும். கொடியைக் கண்டே தங்கள் மனம் கலக்கமுறும்போது ஷீர்டியில் ரதம், பல்லக்கு, குதிரை மற்றும் பல பரிவாரங்களையெல்லாம் கண்டால் தங்கள் மனம் எவ்வளவு நிலைகுலையும்" என்றார்கள். இதைக்கேட்டு ஸ்வாமி மேலும் குழப்பமடைந்தவராக, "குதிரை, பல்லக்கு இன்னோரன்ன படாடோபங்களையுடைய சாதுக்கள் சிலரை மட்டும் நான் கண்டதில்லை, (அனேகரைக் கண்டிருக்கிறேன்) அத்தகைய சாதுக்களைக் காண்பதைவிட திரும்பிப் போதலே எனக்கு நன்று" என்றுரைத்தார். இதைக்கூறிக்கொண்டு அவர் திரும்பிப்போகக் கிளம்பினார். உடன் வந்தோர் அங்ஙனம் செய்யவேண்டாம் என்றும், தொடர்ந்து போகலாம் என்றும் வற்புறுத்தினர்.

பாபாவை இங்ஙனம் குறுகிய மனமுள்ளவராக சிந்திப்பதை நிறுத்தும்படியும், அந்த சாது (அதாவது பாபா) கொடிகளையோ, பரிவாரங்களையோ, புகழையோ எள்ளளவும் பொருட்படுத்துபவர் அல்ல என்று கூறினர். அன்பாலும், பக்தியாலும் அவரது அடியவர்களும், பக்தர்களுமே இவற்றையெல்லாம் ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் கூறினர். முடிவாகப் பயணத்தைத் தொடரும்படி அவரை இணங்கவைத்து ஷீர்டிக்குச் சென்று பாபாவைத் தரிசிக்கச் செய்தனர். பாபாவை முற்றத்திலிருந்து கண்டவுடன் அகமுருகி கண்களில் கண்ணீர் மல்க குரல் நெகிழ அவரது கெடுதலான எண்ணங்களெல்லாம் அவரைவிட்டு அகன்று போயின. "எங்கே நமது மனம் மிகமிக மகிழ்ந்து களிப்படைகிறதோ, அதுவே நமது இருப்பிடமும், களைப்பாறும் இடமுமாகும்", என்ற அவரது குருவின் மொழிகளை நினைவுகூர்ந்தார். பாபாவின் பாதத் தூளிகளில் அவர் புரள விரும்பி பாபாவை நெருங்கியபோது, பாபா கடுங்கோபமடைந்து "எங்களுடைய டம்பமெல்லாம் எங்களுடம் இருக்கட்டும். நீ திரும்ப உன் வீட்டிற்குப் போ. இம்மசூதிக்குள் வந்தாயோ, ஜாக்கிரதை. மசூதிமேல் கொடி பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் ஒருவரின் தரிசனத்தை ஏன் காணவேண்டும்? இது துறவின் அறிகுறியா? இங்கே கணமேனும் இருக்காதே" என்றார். ஸ்வாமி ஆச்சரியத்தால் திடுக்கிட்டார்.

பாபா தமது உள்ளத்தைப் படித்து அதைப் பேசினார் என உணர்ந்தார். எத்தகைய நிறைபேரறிவுடையவர் அவர்! தாம் ஞானமற்றவர் என்றும், பாபா புனிதமான உயர்ந்தோர் என்றும் அவர் உணர்ந்தார். சிலரை பாபா அரவணைப்பதையும், வேறு ஒருவரைக் கையால் தொடுவதையும், மற்றவர்களைத் தேற்றுவதையும், சிலரை நோக்கிப் புன்னகை செய்வதையும், சிலருக்கு உதிப்பிரசாதம் அளிப்பதையும், இவ்வாறாக அனைவரையும் மகிழ்வூட்டி, திருப்திப்படுத்திக் கொண்டிருப்பதையும் கண்டார். தான் மட்டும் ஏன் அவ்வளவு கடுமையாக நடத்தப்பட வேண்டும்? அதைப்பற்றி அவர் தீவிரமாகச் சிந்தித்து, தமது அந்தரங்க எண்ணமே பாபாவின் நடத்தையில் எதிரொலிப்பதை உணர்ந்து இதையே ஒரு பாடமெனக் கருதி முன்னேறவேண்டுமென நினைத்தார். பாபாவின் கோபம் மறைமுகமான ஆசீர்வாதமே. பிற்காலத்தில் பாபாவின் மீது அவருக்குள்ள நம்பிக்கை, உறுதிப்படுத்தப்பட்டு பாபாவின் ஒரு முற்றிலும் பற்றுறுதியுள்ள அடியவராக ஆனார் என்று சொல்லத் தேவையில்லை.

நானா சாஹேப் சாந்தோர்கர்

நானா சாஹேப் சாந்தோர்கரின் கதையுடன் ஹேமத்பந்த் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார். ஒருமுறை மசூதியில் நானா சாஹேப், மஹல்ஸாபதி மற்றுமுள்ளோருடன் அமர்ந்திருக்கையில், பீஜப்பூரிலிருந்து ஒரு முஹமதிய கனவான் தனது குடும்பத்துடன் பாபாவைக் காணவந்தார். கோஷா(பர்தா) அணிந்த பெண்மணிகளைக் கண்ட நானா, அப்பால் போய்விட விரும்பினார். ஆனால் பாபா அவர் அங்ஙனம் செய்வதைத் தடுத்துவிட்டார். பெண்மணிகள் வந்து பாபாவைத் தரிசனம் செய்தனர். பாபாவின் பாதங்களை வணங்குமுகமாக அவர்களில் ஒருத்தி முகத்திரையை எடுத்து வணங்கிவிட்டுப் பிறகு மூடும்போது, நானா சாஹேப் அவளது முகத்தைக்கண்டு அவளின் அபூர்வ அழகின் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டவராய், அவளது முகத்தை மீண்டும் காண விரும்பினார். அப்பெண்மணி அந்த இடத்தைவிட்டு அகன்றதும், நானாவின் குழப்பத்தை அறிந்துகொண்டு, பாபா அவரை நோக்கி,

"நானா நீ ஏன் வீணாகக் கலங்குகிறாய். புலன்கள் அவைகளுக்கிடப்பட்ட பணியை அல்லது கடமையைச் செய்யட்டும். நாம் அவைகளின் வேலையில் குறுக்கிட வேண்டாம். கடவுள் இவ்வழகிய உலகத்தைப் படைத்துள்ளார். அதன் அழகைப் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும். மனம் மெதுவாகப் படிப்படியாக அமைதியுறும். முன்கதவு திறந்திருக்கும்போது, பின்வழியாக ஏன் செல்ல வேண்டும். உள்ளம் தூய்மையாக இருக்குமிடத்து எவ்வகையிலும் எவ்விதக் கஷ்டமும் இல்லை. நம்மிடத்தே எவ்விதக் கெட்ட எண்ணமும் இல்லையென்றால், ஏன் ஒருவர் மற்றொருவருக்குப் பயப்படவேண்டும்? கண்கள் தம் வேலையைச் செய்யலாம், நீ ஏன் வெட்கப்பட்டுத் தடுமாறுகிறாய்?" என்றார்.

ஷாமா அவ்விடத்தில் இருந்தார். பாபா கூறியதன் பொருளை அவரால் உணர இயலவில்லை. எனவே வீடு திரும்பும் வழியில் இதை நானாவிடம் கேட்டார். நானா, அழகிய பெண்மணியைக் கண்டதும், தாம் மனக்கலக்கமடைந்ததையும், பாபா அதை எங்ஙனம் அறிந்து அதைப்பற்றி அறிவுரை கூறினார் என்பதையும் கூறினார். பாபாவின் பொருளை நானா இவ்வாறாக விளக்கினார். "அதாவது நமது மனம் இயற்கையாகவே சலனமுள்ளது. அதைத் தான்தோன்றித்தனமாகப் போக அனுமதிக்கக் கூடாது. உணர்வுகள் குழப்பமுறலாம். ஆயினும் உடம்பு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படவேண்டும். பொறுமையை இழக்க அனுமதிக்கக் கூடாது.

விஷயங்களின் பின்னால் உணர்வுகள் தம் குறிக்கோளை நோக்கி ஓடுகின்றன. ஆனால் அவைகளை நாம் தொடர்ந்து சென்று அவைகளின் குறிக்கோளுக்காக ஏங்கக்கூடாது. மெதுவான படிப்படியான பயிற்சியினால் சலனங்களை வெற்றிகாண இயலும். உணர்ச்சிகளால் நாம் இயக்கப்படக்கூடாது. ஆயினும் அவைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்த இயலாது. தக்க முறையிலும், ஒழுங்காக சந்தர்ப்பத்துக்குத் தேவையானபடியும் அவைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அழகு என்பது பார்க்கப்படவேண்டிய ஒன்றே. பொருட்களின் அழகை நாம் பயமின்றிக் காணவேண்டும். வெட்கத்துக்கோ, பயத்துக்கோ அதில் இடமில்லை. கெட்ட எண்ணங்களை மட்டும் நம் மனதில் அனுமதிக்கக் கூடாது. பற்றில்லாத மனதுடனே கடவுளின் அழகான படைப்புக்களைக் கவனிக்கவேண்டும். இவ்வாறாக உணர்வுகள் எளிதாகவும், இயற்கையாகவும் கட்டுக்குள் கொணரப்பட்டுவிடும். பொருட்களை அனுபவிப்பதில்கூட நீங்கள் இறைவனைப்பற்றி ஞாபகப்படுத்தப்டுவீர்கள்.

வெளி உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்து, மனம் இலட்சியத்தை ஓடித்தொடர அனுமதிக்கப்பட்டு அவைகள்பால் பற்றுக்கொண்டிருப்பின் ஜனன மரணச் சுழல் முடிவுறாது. புலன் உணர்வுகளின் விஷயங்கள் தீமையானது. விவேகம் என்னும் சாரதியைக்கொண்டு நாம் மனதைக் கட்டுப்படுத்தி உணர்வுகளைத் தாறுமாறாக அலையவிடாமல் இருப்போம். அத்தகையதொரு சாரதியுடன் நம் முடிவான இருப்பிடமும், நமது உண்மையான வீடுமாகிய, எங்கு சென்றால் மறுபிறவி இல்லையோ அந்தத் திருமாலின் திருவடிகளை எய்துவோம்" என்றார்.

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்