ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன.
ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால், அந்த விவசாயி குதிரைக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான்.., மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, *நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன்* அந்த மருந்தைக் குதிரைக்குச் சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனைக் கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லியபடி குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச் சென்றார்.
இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. விவசாயியும் அந்தக் குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக் கொடுத்தான். மறுநாள் வந்த மருத்துவர், குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய மருந்தைக் கொடுத்துச் சென்றார். அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான், அந்த விவசாயி. பின்பு சிறிது நேரம் கழித்து, அங்கு வந்த ஆடு, அந்தக் குதிரையிடம், நண்பா, நீ எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள் என்று அந்த குதிரையை ஊக்குவித்தது. மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார். அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு, அந்த விவசாயிடம் நாளை குதிரை நடக்கவில்லை என்றால், அதனைக் கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கும் பரவிவிடும் என்று சொல்லிச் சென்றார். இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர் சென்றதும், குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள் என்று சொல்லியது. அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து போகும் படியாக குதிரை ஓடியது. மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான்.
அவன் மருத்துவரிடம், என் குதிரை நன்றாகக் குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத் தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த மருந்துதான் காரணம். என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து கொண்டாடி விடுவோம் என்றான். குதிரை ஆட்டின் *ஊக்கத்தால்* எழுந்து நடந்தாலும் மருத்துவர் கொடுத்த மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாகத்தான் விவசாயி நினைத்தான்...!!!
*நீதி:-*
இப்படித்தான் *இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்தது* என்பதை உணராமல், பலரும் உண்மையைப் *பலி கொடுத்துக்* கொண்டிருக்கிறார்கள்.
போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.
அதில் என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.
எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு.
அங்கே ஓர் சிறிய கீத்து கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில், கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார்.
தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க... அந்த கடிதம் நான் எழுதவில்லை. எனக்கு எழுத படிக்க தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன். தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தே மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.
என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடிதத்தை கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறி கொண்டு தான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லி கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி.
மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?
*மனித நேயம் சாகவில்லை....*
ஹி ஹி...அந்த கடிதத்தை நான் தான் ஏழுதி வெச்சேன்....
ஒரு புலி வேடனைத் துரத்திக் கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது. புலி கரடியிடம் கூறிற்று, இவ்வேடன் நமது மிருக குலத்துக்கே பகைவன், இவனைக் கீழே தள்ளி விடு!
இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று. சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று, எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.
வேடன் கரடியைத் தள்ளிவிட்டான் கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது. அப்போது புலி கரடியிடம் சொன்னது, இந்த மனிதன் நன்றிகெட்டவன். சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற கூறிய உன்னையே தள்ளிவிட்டான். அவனை தள்ளிவிடு!
அதற்கு கரடி சொன்னது, எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.
துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. *சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள்...*
ஆளவந்தார் அந்த ஊரில் முக்கியப் புள்ளி. தன் மனைவி மற்றும் 3மகன்களுடன் செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்தார்.
மூன்று மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்த அவர், தன் சொத்தை நான்கு பங்காக சமமாக பிரித்து ஆளுக்கு ஒரு பங்கைப் பிரித்து அவர்களுக்குத் தந்தார். தன் தேவைக்காக ஒரு முடிவு செய்தார்.
சொத்தில் ஒரு பங்கை தன் கூடவே வைத்துக் கொண்டார்.
சில ஆண்டுகள் சென்றன. அவரது மனைவியும் அவரை விட்டு மறைந்து போக தனித்து விடப்பட்டார்.
ஒரே ஒரு நம்பிக்கையான உதவியாளர் மற்றும் சில வேலைக்காரர்கள். இவர்களே அவர்களுக்கு இப்போது துணையாக இருந்தனர்.
இதுவே அவர் வாழ்க்கை நிலை தற்போது.
தந்தை தனியாகத் துன்பப்படுவதை பார்த்து அவர் மூன்று மகன்களால் தாங்க முடியவில்லை.
ஒரு நாள் அவர்கள் மூவரும் கூடிப் பேசி அவரிடம் வந்தார்கள்.
அப்பா, நீங்கள் ஏன் தனியாக இந்த வீட்டில் கஷ்டப்பட வேண்டும்? உங்களுக்கு என்று இருக்கும் சொத்தையும் எங்களுக்கு சமமாக பிரித்துத் தந்து விடுங்கள்.
எங்களில் யார் வீட்டில் வேண்டுமானாலும் உங்கள் விருப்பம் போல தங்கியிருங்கள்.
உங்களுக்கு எந்த குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம் என்று பாசத்துடன் அழைத்தார்கள்.
ஆளவந்தார் நினைத்தார். மகன்களுடன் தங்குவது நல்லது என்று அவருக்கும் பட்டது. இருந்தாலும் சிந்தித்து முடிவு செய்வோமே.?
என்று அவர் மனதுக்குள் திடீரென தோன்றியது.
ரொம்ப சந்தோஷம். ஒரு 3 மாதம் கழித்து வாருங்கள் நான் என் எண்ணத்தை அப்போது சொல்கிறேன் உங்களிடம் என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
பிள்ளைகளை தந்தை காப்பாற்றுவது போல தந்தையை பிள்ளைகள் காப்பாற்றுவார்களா.? என்று அன்றுமுதல் ஒரே சிந்தனை அவருக்கு.
தன் உதவியாளரை அழைத்த ஆளவந்தார், நம் வீட்டுத் தோட்டத்தில் குருவி ஒன்று புதிதாக கூடு கட்டியுள்ளது. அதில் சில குருவிக் குஞ்சுகள் உள்ளது போலத் தெரிகிறது.
தாய் குருவியை இல்லாத சமயம் அதன் குஞ்சுகளை மட்டும் அந்த மரத்தில் ஏறி அந்தக் கூண்டோடு பத்திரமாக எடுத்து வா என்று பணித்தார்.
உதவியாளரும் அவர் சொன்னது போலவே அந்தக் குருவி கட்டிய கூடோடு குருவிக் குஞ்சுகளை கொண்டு வந்தார்.
அந்த குருவிக் குஞ்சுகளை தகுந்த பாதுகாப்போடு வைத்தார் ஆளவந்தார்.
அந்த குஞ்சுகள் வெளியே வர முடியாதபடி சின்ன தடுப்பு அமைத்து அந்தக் கூண்டை தன் படுக்கையறை ஜன்னல் அருகே தொங்க விட்டார்.
தாய்க்குருவி அந்தக் கூண்டை கண்டு பிடித்து அருகே வந்தது. கூவியபடியே அதை சுற்றிச் சுற்றிப் பறந்தது.
தன் குஞ்சுகள் அங்கிருந்து வெளியே வர முடியாது என்பதை அறிந்தது.
இருந்தாலும் அந்தக் குருவி வெளியே பறந்து சென்று வேளா வேலைக்குத் தவறாமல் தன் குஞ்சுகளுக்கு உணவைக் கொண்டு வந்து ஊட்டியது.
சிறிது காலம் சென்ற பின் குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்தது.
கூண்டிற்கு உள்ளேயே பறக்கத் தொடங்கின அவைகள்.
இப்போது ஆளவந்தார் வேறு ஒரு வேலை செய்தார். தன் தோட்டக்காரனை வைத்து அந்த தாய்க் குருவியை பிடித்து வெளிவர முடியாத ஒரு கூண்டில் அடைத்து அந்தக் கூண்டை எடுத்து வரப் பணித்தார்.
அந்த குஞ்சுக் குருவிகள் இருக்கும் அதே கூண்டிற்கு அருகிலேயே அந்தக் கூண்டை தொங்க விட்டார்.
இப்போது அவர் அந்த குஞ்சுகள் இருக்கும் கூண்டைத் திறந்து விட்டார்.
அதில் இருந்த எல்லா குஞ்சுகளும் வெளியே உற்சாகமாக பறந்து சென்றன.
அந்தக் குஞ்சுகள் பறப்பதைக் கண்ட தாய்க் குருவிக்கு ஆனந்தம்.
தன் மகிழ்ச்சியை அது உரத்த குரலில் வெளிப்படுத்தியது.
வெளியே பறந்து சென்ற அதன் குஞ்சுகள் அங்கு வரும், தாய்க்குருவியை பார்க்கும், அதற்கு உணவு கொண்டு வரும் என்று எதிர்பார்த்தார் ஆளவந்தார்.
ஆனால் அதன் குஞ்சுகள் எதுவுமே அந்த தாய்க் குருவி இருக்கும் கூண்டு பக்கமே வரவில்லை.
பொறுத்துப் பார்த்து விட்டு அந்த தாய்க்குருவிக்கு பல தானியங்களையும் அளித்து. பிறகு அந்த கூண்டைத் திறந்து விட்டார்.
ஆனால் என்ன ஒரு ஆச்சரியம், எங்கு வெளியே சென்றாலும் அந்த தாய்க் குருவி திரும்பவும் அந்தக் கூண்டிற்கே வந்தது.
ஆளவந்தாரிடம் நல்ல தோழமையையும் பாராட்ட ஆரம்பித்தது.
ஆளவந்தார் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் இப்போது.
அவர் கூறியது போலவே மூன்று மாதங்கள் கழித்து அவரது மூன்று மகன்களும் வந்தார்கள்.
அப்பா எங்களுடன் தங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள் என்றும் சொன்னார்கள் முஸ்தீபாக.
ஆளவந்தார் மூன்று மகன்களையும் வரவேற்றார்.
அவர்கள் மனது நோகாமல் விதமாக பின்வருமாறு சொன்னார்,
என்னை இப்படியே விடுங்கள். உங்கள் அம்மா வாழ்ந்த இந்த வீட்டில் வாழ்ந்து எனக்கு பழக்கமாகி விட்டது.
எனவே நான் இங்கே தனிமையாகவே வாழ ஆசைப்படுகிறேன்.
எனக்கு பிறகு என் பங்கான இந்த சொத்தையும் நான்காக பிரிக்க உத்தேசித்துள்ளேன்.
3 பகுதிகள் உங்கள் மூவருக்கும் மற்றும் ஒரு பகுதி என் உதவியாளார் மற்றும் இந்த வீட்டு வேலைக்காரர்களுக்கு என்று உயில் எழுத உத்தேசித்துள்ளேன்.
அடிக்கடி உங்கள் குடும்ப சகிதமாக என்னை வந்து பார்த்துக்கொள்ளுங்கள்.
என் உடல்தான் இங்கே. உயிர் என்றும் உங்களோடு என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
இப்போது அவர் மனம் தெளிவாக இருந்தது.
அந்த தாய்க் குருவி அவர் தோளில் எங்கிருந்தோ பறந்து வந்து அமர்ந்தது. நீங்கள் உங்கள் மகன்களிடம் சொன்னது சரிதான் என்று அது சொல்வது போல ஆளவந்தாருக்குத் தோன்றியது.
நீதி: "எலி வலையானாலும் தனி வலையாக இருப்பது" நன்று.
*நம் பிள்ளைகள் நம்மை கடைசிவரை பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள், என்ற நம்பிக்கை இருந்த போதிலும். நாம் ஓய்வு எடுத்துக் கொள்ளும் காலம், நமக்கென்று சொத்து சேர்த்து வைத்துக் கொண்டு தனியாக இருப்பது நலம் யாருக்கும் பாரமாக இருக்காமல்?*
இந்த நாள் இனிய நாள் ஆக அமைய வாழ்த்துகள் நண்பர்களே🙏
செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண். வீட்டு வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள். ஒரு கட்டு கீரை என்ன விலை....? பத்து ரூபாய். பத்து ரூபாய்யா...? ஐந்து ரூபாய் தான் தருவேன். ஐந்து ரூபாய்ன்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ. இல்லம்மா வராதும்மா. அதெல்லாம் முடியாது. ஐந்து ரூபாய் தான்.
பேரம் பேசுகிறாள் அந்த தாய். பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு, மேல கட்டுக்கு இரண்டு ரூபாய் போட்டு கொடுங்கம்மா என்கிறாள். முடியவே முடியாது. கட்டுக்கு ஐந்து ரூபாய் தான் தருவேன்... என்று பிடிவாதம் பிடித்தாள். கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு, சரிம்மா உன் விருப்பம் என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு காசை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில் வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.
என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடல...? என்று அந்த தாய் கேட்க இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும். சரி, இரு இதோ வர்றேன், என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள், திரும்பும் போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். இந்தா சாப்பிட்டு போ என்று கீரைக்காரியிடம் கொடுத்தாள். எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த அந்த தாயினுடைய மகன் ஏம்மா ஐந்து ரூபாய்க்கு பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு முப்பது ரூபாய் வருதும்மா.....? என்று கேட்க அதற்கு அந்த தாய், *வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா என்று கூறினாள்...!!!*
போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.
ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள் ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.
இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்.
நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.
தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.
ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகி விடுகிறது. அதை குணப்படுத்த மலை உச்சியில் உள்ள சஞ்சீவ மலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் குணமாகும். அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால் தான் முடியும்.
அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள். அதில் முதலாமவன் கொண்டு வருகிறேன் என கிளம்புகிறான். தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது. நான் உன் பின்னால் வருவேன். நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும். வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும். நடப்பதை நிறுத்தக் கூடாது. நடந்து கொண்டே இருக்க வேண்டும். எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்கக் கூடாது முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழி காட்டிச் சென்றது. திடீரென பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்க வில்லை என்னாயிற்று என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான். நிபந்தனையை மீறிவிட்டான். கற்சிலையாகி விடுகிறான்.
அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான். கிட்ட தட்ட நிபந்னைகளுக்கு உட்பட்டு பாதி தூரம் வந்து விடுகிறான். திடீரென சிரிப்பு ஒலி கேட்கிறது. ஆர்வம் மிகுதியால் திரும்பி பார்க்கிறான். அவனும் கற்ச்சிலையாகி விடுகிறான்.
அடுத்து மூன்றாமவன் வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான். பின்னால் அலறல் சத்தம், சிரிப்பொலி மாறி மாறி கேட்டாலும் இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான். வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான்.
*நீதி:-* பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்து விட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்சியையும் செய்யும். அதை புறக்கணிப்பதில் நம் வெற்றி அடங்கி உள்ளது.
நீதி; ஒரு வீட்ல முதல் இரண்டு பேர் தத்தியா இருப்பாங்க. எதாவது முக்கிய வேலனா மூணாவது ஆள முதல்லயே அனுப்புங்க
சித், ஹாரி என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாய் கேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் சித். அது பொய், அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்!
கடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு ட்ரெஸ் எடுத்து அதன் விலையை சித்திடம் கேட்பார். சித் கடைக்கு பின்னால் துணி தைத்துக் கொண்டிருக்கும் ஹாரியிடம் இந்த ட்ரெஸ் என்னப்பா விலை என்று கத்துவார். ஹாரி அங்கிருந்து எண்ணூறு என்பார். சித் உடனே எவ்வளோ என்று மீண்டும் கேட்பார். எண்ணூறு டா செவிட்டு முண்டமே என்று ஹாரி பதிலுக்கு கத்துவார்.
சித்திக் கஸ்டமரிடம் திரும்பி ஐநூறு என்பார். கஸ்டமரும் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்து விட்டு துணியோடு எஸ்கேப் ஆவார்! எண்ணூறு என்று கேட்ட மனதிற்கு ஐநூறு என்பது மிக சின்னதாய் தெரிகிறது. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது.
இக்கதையில் ஒரு ட்விஸ்ட் உண்டு. அந்த துணியின் உண்மையான மதிப்பு முன்னூறு ரூபாய் தான்.!
ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார். இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்.
முதல் நாள் 10 ஆணி,மறு நாள் 7,பின்பு 5, 2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது. ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.
இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான். இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.
45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.
உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய், சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? *அந்த இளைஞன் வெட்கித் தலை குனிந்தான்.*
இதுக்குத்தான் ஒரு ஆணியும் பிடுங்க வேணாம்னு சொல்றது....
ஒரு விவசாயிக்கு வயது முதிர்ந்த நிலையில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக் கொள்ளும் படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.
பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், தந்தை குறிப்பிட்ட புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.
முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா இரண்டடி என்று சொல்வதற்கு பதிலாக ஓரடி என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.
எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே!
அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி.. தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.
இப்படி உழைப்பால் வரும் பணத்தை தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.
கிருஷ்ணன் விடை தெரியாத கேள்விகளை சுமந்து கொண்டு போலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். அங்கே நின்றுகொண்டு இருந்த மணமக்களை பார்த்து கொண்டே இன்ஸ்பெக்டர் முன்னாடி போய் அமைதியாய் அமர்ந்தார். இன்ஸ்பெக்டர் அவரிடம் சார் உங்க வேதனை ஒரு அப்பாவா எனக்கும் புரியுது. ஆனாலும் எங்களுக்கும் சில கடமைகள் மனசாட்சியை மீறி செய்ய வேண்டி இருக்கு. இனி நீங்க தான் முடிவு பண்ணனும் என்றதும் கிருஷ்ணன் தனது செல்போனில் மனைவியை அழைத்தார்.
சில நிமிடத்திற்கு பிறகு அவர் மனைவி மாலதி, கலங்கிய கண்களுடன் ஸ்டேஷனுக்குள் வந்தார். தனது கையில் இருந்த பையை கிருஷ்ணனிடம் கொடுத்தார். அதை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தப்படி இதுல என் பொண்ணு கல்யாணத்திற்கு சேமித்து வச்ச நகைகள், பணம் இருக்கு. அவளுக்காக இன்ஸ்யூரன்ஸ்ல கட்டுன பணமும் முடிஞ்சு போச்சு. அதுவும் அவளுக்கு தான். எங்க காலத்து அப்புறம் வீடும் எழுதி தர்றோம். ஆனா எங்களுக்கு இந்த பொண்ணு வேணாம் சார். தாங்க முடியல சார் .
இது துரோகம். பெத்தவங்களுக்கு புள்ளைங்க செய்யுற பச்ச துரோகம். அவளோட பத்து வயசுல இருந்து நான் வெளியில டீ கூட சாப்டறது கிடையாது. அதை கூட சேமிச்சு வச்சேன். எல்லாம் கனவா போயிருச்சு. பரவாயில்லை சார் நல்லா இருக்கட்டும். ஆனா நாங்க செத்து போனாலும் பாக்க மட்டும் வரக்கூடாது என்றவர் மாலதியுடன் வேகமாய் வெளியேறினார். ஸ்டேஷனில் ஓரமாய் நின்றிருந்த காவ்யா கண்ணீர் விட்டு கதறியப்படி மணமகன் கார்த்தியின் மீது சாய்ந்தாள்.
மாலதி தன் நிலை மறந்து அந்த ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் சாய்ந்து கிடந்தார். தனக்கான ஒரே துணையும் இப்போது உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை நினைத்து உடைந்து போனார். இந்த ஆஸ்பத்திரியில் வைத்து டிரிட்மெண்ட் பாக்குற அளவுக்கு கையில் பணமும் இல்லை என்கிற நிலையில் டாக்டர் வந்து அவருக்கு ரோம்ப நாளா இதயத்துல பிரச்சனை இருக்கு இப்போ மோசமான சூழ்நிலையில் இருக்கார். ஆபரேஷன் பண்ணனும் உடனே பணத்த கட்டுங்க என்றதும் உடைந்து போனார்.
மாலதி தோள்களில் ஒரு கை ஆறுதலாக பற்ற திரும்பி பார்த்த மாலதி அது காவ்யா என்றதும் விலகி சென்றார். அவர் அருகில் சென்ற காவ்யா அப்பாக்கு ஹார்ட் ப்ராபளம் இருக்குன்னு எனக்கு முன்னாடியே தெரியும். நானும் அவர் டிரிட்மெண்ட் பாத்துக்குவாறுக்கு எதிர் பார்த்தேன். ஆனா எனக்கு பெரிய இடமா மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சுட்டார்.
அவர் அப்ப இருந்த நிலையில் நான் சொல்றத அவர் கேட்க கூடிய நிலையில் இல்ல. அதனால தான் என் கூட படிச்ச நம்மள மாதிரி சாதரண குடும்பத்த சேர்ந்த கார்த்திய கல்யாணம் செஞ்சுகிட்டேன். என்றதும் கார்த்தி உள்ளிருந்து வந்து காவ்யா பணம் கட்டியாச்சு. இன்னும் ஒரு மணி நேரத்துல ஆபரேஷன் பண்ணிருவாங்க என்றதும் மாலதி தனது கைகளை உயர்த்தி நன்றி கூறினார்.
கார்த்தி அவரிடம் இது அவருடைய பணம் தான்ங்க. தன்னை பத்தி யோசிக்காத அப்பா. அப்பா பத்தி யோசிக்குற மகள். அழகான இந்த குடும்பத்தில் நானும் ஒருத்தன்னு நினைக்கும் போது சந்தோசமாய் இருக்கு என்றதும் மாலதி காவ்யாவை கட்டி பிடித்து கொண்டார் . கிருஷ்ணன்
கண் முழித்ததும் தனது மகளை தேடினார். அவர் முன்பு வந்து நின்ற காவ்யாவிடம் *என் மகளா? இல்ல அம்மாவாடா நீ?* என்றதும் அவரது தலையை கண்ணீருடன் தலை கொதினாள்.
நம்ம வீட்டு பசங்க இதெல்லாம் யோசிக்க மாட்டேங்குதுங்க... நாமளா பாத்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதா இருக்கிறது...
ஒரு பெரிய செல்வந்தரின் மகள் ஓர் ஏழை இளைஞனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். இது பற்றித் தந்தையிடம் சொன்னாள். எனக்கு வரும் மருமகன் ஏழை என்பதற்காக நான் கவலைப்பட மாட்டேன். அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பார்ப்போம் என்றார் தந்தை. மறுநாள் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞனை மகள் அழைத்து வந்தாள். அவனை ஒரு நாற்காலியில் அமரச் சொன்னார். சிறிது நேரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
இளைஞன் குழப்பத்தோடும், பரபரப்போடும் இருந்தான். அவன் பக்கத்தில் சில துடைப்பகுச்சிகள் சிதறிக் கிடந்தன. இளைஞன் ஒரு துடைப்பக் குச்சியை எடுத்து துண்டு துண்டாக உடைத்துக் கீழே போட்டான். பிறகு ஒவ்வொரு துடைப்பக் குச்சியையும் எடுத்து துண்டு துண்டாக உடைத்துப் போட்டான். சற்று நேரம் கழித்து செல்வந்தர் தன் மகளோடு அங்கே வந்து சேர்ந்தார். இளைஞனை நோக்கி உன்னைச் சோதிப்பதற்க்காகத்தான் இந்த துடைப்பக் குச்சிகளை இங்கே போட்டிருக்கிறேன். இவைகளை எடுத்து அதோ இருக்கும் துடைப்பத்தோடு சொருகி வைத்து இருக்கலாம். அல்லது இவற்றை ஒழுங்காக சேர்த்து பக்கத்தில் வைத்து இருக்கலாம்.
நீயோ, இவற்றை துண்டு துண்டாக உடைத்து ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் ஆக்கிவிட்டாய். நான் பாடுபட்டு சேர்த்த செல்வம் உன் கையில் கிடைத்தால் என்ன ஆகும்? இந்தக் குச்சிகளை உடைத்து வீணாக்கியதைப் போல என் செல்வத்தையும் வீணாக செலவு செய்து காலியாக்கி விடுவாய். அதனால் உன்னை நல்ல தகுதி உடையவனாக ஆக்கிக் கொண்ட பிறகு என்னை வந்து சந்தித்துப் பேசு என்றார். இளைஞன் தலை கவிழ்ந்தவாறு எழுந்து சென்றான். செல்வந்தரின் மகளும் தந்தை கூறிய நியாயத்தைப் புரிந்து கொண்டாள்.
பரபரப்பான வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறேன். பல பிரச்சனைகள் வீட்டில், தெருவில், ஊரில், உறவில், நண்பர்களிடத்தில், வேலை செய்யும் இடத்தில் என பிரச்சினை, பிரச்சினை, பிரச்சனை... ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது, தூங்க முடியவில்லை. எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள் சாமி என்றவாறே அந்த முனிவரின் முன்பாக நின்றிருந்தான் ராமு.
அப்போது மாலை நேரம். முனிவர் அவனிடம் பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன அவை என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா என்றார். சென்றவன் திரும்பி வந்து, 100 மாடுகள் இருக்கும் சாமி. எல்லா மாடுகளும் நின்று கொண்டு இருக்கின்றன என்றான்.
ராமு உனக்கு இன்னிக்கு ஒரு சின்ன வேலை தர்றேன். நீ அந்த 100 மாடுகளையும் தூங்க வைக்கணும். அந்த 100 மாடுகளும் தரையில் படுத்து ஓய்வானவுடன் அங்கே பக்கத்துலயே இருக்கிற சின்ன ஓய்வறையில் நீ போய் படுத்து தூங்கிக்கலாம். 100 மாடுகளும் படுக்கணும், அதுதான் முக்கியம். சரியா? இந்த வேலைய முடிச்சுட்டு காலையில் திரும்பி வா என்றார்.
சரி அய்யா என்றவாறு தோட்டத்திற்கு போனவன் இரவெல்லாம் இருந்துவிட்டு, கண்களில் தூக்கமின்றி காலையில் களைப்புடன் திரும்பி வந்து, அய்யா இரவு முழுவதும் தூங்கவே இல்லை என்றான். என்ன ஆச்சு? என்றார் முனிவர்...
100 மாடுகளையும் படுக்க வைக்க படாதபாடுகள் பட்டும் முடியவில்லை. சில மாடுகள் தானாகவே தரையில் படுத்துவிட்டன. சில மாட்டை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். ஆனால் அனைத்து மாட்டையும் படுக்கவைக்க முடியவில்லை. சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன. அனைத்து மாட்டையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை சாமி! அதனால நான் தூங்குவதற்கு போகவே இல்லை. இரவு முழுவதும் தூங்கவும் இல்லை! என்றான்.
முனிவர் சிரித்தபடியே,
*இதுதான் வாழ்க்கை.! வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது மாடுகளை படுக்க வைப்பது போன்றது...!* சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும். சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம். ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிதாக எழலாம். அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது.
பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே. தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை கடவுளின் கைகளில் அல்லது காலத்தின் ஓட்டத்தில் ஒப்படைத்துவிட்டு. உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்! என்றார்.
முனிவரை வணங்கிவிட்டு சென்றவன் சிலநாள் கழித்துவந்து முனிவரிடம் சில மாடுகள் படுக்கவில்லை என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன் என்றான்.
அவன் ஒரு பிச்சைக் காரனின் மகன். இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பான். அவன் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருந்தான் என்றால், அரசனின் யானை வீதியில் செல்லும் போது, அவனால் அதன் வாலைப் பிடித்து அந்த யானையை நகர விடாமல் செய்ய முடியும். சில சமயங்களில் அரசனுக்கே தர்மசங்கடமாகி விடும். ஏனெனில் அவர் யானை மீது உட்கார்ந்து கொண்டிருப்பார், மந்தை முழுவதும் மக்கள் கூடி நின்று இக்காட்சியைப் பார்த்து சிரிப்பார்கள். எல்லாம் இந்த பிச்சைக்காரனின் மகனால் விளைவது. அரசர் தன் மந்திரியை அழைத்தார். ஏதாவதுசெய்தே ஆகவேண்டும். இது எனக்கு பெரிய அவமானம்.
கிராமத்தின் வழியாக செல்வதற்கே நான் பயப்பட வேண்டியிருக்கிறது. அந்த பையன் சில சமயங்களில் வேறு கிராமங்களுக்கும் வந்து விடுகிறான்! எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவன் யானையின் வாலைப் பிடித்து விடுகிறான், அதுவும் நகராமல் நின்று விடுகிறது. அந்தப் பையன் அதிக சக்தி வாய்ந்தவனாக இருக்கிறான். அவன் சக்தியை நீக்க ஏதாவது செய்தாக வேண்டும்.
மந்திரி நான் சென்று அறிவாளிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனெனில், அவன் சக்தியை எப்படி நீக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது. அவன் ஒரு பிச்சைக்காரன். அவன் கடை வைத்திருப்பவன் என்றால், அது அவன் சக்தியை உறிஞ்சி விடும். தொடக்கப் பள்ளியில் அவன் ஒரு ஆசிரியராக இருந்தான் என்றால், அப்பொழுதும் அவன் சக்தி நீக்கப்பட்டு விடும். ஒரு அலுவலகத்தில் அவன் வேலை செய்தான் என்றாலும், அவன் சக்தி குறைந்து விடும். ஆனால் அவனுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை, அவன் வேடிக்கைக்காக வாழ்கிறான், மக்கள் அவனை விரும்புகிறார்கள், அவனுக்கு உணவிடுகிறார்கள்... அதனால் அவனுக்கு உணவிற்கும் பஞ்சமில்லை. அவன் மகிழ்ச்சியாய் இருக்கிறான். சாப்பிட்டுவிட்டு தூங்குகிறான். அதனால், இது மிகவும் கடினம். ஆனாலும் நான் ஆலோசனை கேட்கச் செல்கிறேன்.
ஒரு வயதான அறிவாளியிடம் சென்றார். அவர் கூறினார் ஒன்று செய்யுங்கள். அந்தப் பையனிடம் சென்று நீங்கள் அவனுக்குத் தினமும் ஒரு தங்கக் காசு கொடுப்பதாகவும், அதற்காக அவன் ஒரு சிறிய வேலை செய்ய வேண்டும் என்றும் கூறுங்கள். உண்மையிலேயே, அது சிறிய வேலைதான். அவன் கிராமத்திலுள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைக்க வேண்டும். அவ்வளவுதான். நீங்கள் அவனுக்கு தினமும் ஒரு தங்கக்காசு தருவீர்கள்.
மந்திரி, ஆனால் இது எப்படி உதவும்? இது அவனை இன்னும் அதிக சக்தி படைத்தவனாக வேண்டுமானால் மாற்றலாம். ஒரு பணம் கிடைத்தவுடன் அவன் இன்னும் அதிகமாக சாப்பிடுவான். பிச்சை எடுப்பதைப் பற்றிக் கூட கவலைப்பட மாட்டான். அறிவாளி கூறினார், கவலைப்படாதீர்கள், நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள். அவ்வாறே செய்யப் பட்டது. அடுத்த வாரம், அரசர் கடந்து செல்லும் போது, அந்த பையன் யானையை நிறுத்த முயற்சித்து தோல்வியடைந்தான். அதனுடன் இழுத்துச் செல்லப்பட்டான். என்ன நடந்தது? அவன் கவனம் கலைந்து விட்டது. கவலை நுழைந்துவிட்டது. ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும், கோயிலுக்கு சென்று, விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பதை, அவன் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அது கவலையாக மாறி, அவன் முழு இருத்தலைப் பிரித்து விடுகிறது. தூங்கும் போது கூட அது மாலை என்பதைப் போல் கனவு காண தொடங்கி விடுகிறான். கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி விட்டு, தன் ரூபாயைப் பெற்றுக் கொள்கிறான் அவன். பிறகு அந்தத் தங்க ரூபாய்களைச் சேகரிக்கத் தொடங்கி விடுகிறான். ஏழு வைத்திருந்தான், இப்போது எட்டு, பிறகு இவ்வளவு நாட்களுக்குள் நூறு ரூபாய்களை பெற்றுவிட முடியும் என்ற கணக்குப் போட துவங்கி விடுவான். பிறகு, அது இருநூறாகும். கணக்கு வந்தவுடன் அங்கு வேடிக்கை மறந்து விடுகிறது. அதுவும் அவன் செய்ய வேண்டியது மிகச்சிறிய வேலைதான், விளக்கேற்ற வேண்டும். ஒரு நிமிட வேலைதான், அவ்வளவு கூட இல்லை, ஒரு கணத்தில் செய்து விடக் கூடியது. ஆனால் அது கவலையாகி விட்டது. அது அவனது சக்தியை எல்லாம் நீக்கிவிட்டது.
இப்படி தான் சமுதாயம் முழுவதும் உங்கள் சக்தியை உறிஞ்சி விடுகின்றன. உங்களை முழு இருத்தலோடு வாழ விடுவதில்லை. தளர்வோடு வாழ விடுவதில்லை. உங்களுக்கு பிடித்த வேலையை செய்ய விடுவதில்லை. ஒரு நாள் நீங்கள் வேலைக்கு போகாமல் இயல்பாக உங்கள் விருப்பம் போல், ஒரு நாள் கூட இருக்க இந்த சமுதாயம் இருக்க விடாது . ஏன் என்றால், நீ இயல்பாக இருந்தால் நீ பலம் பெற்று விடுவாய். சுய பலம் பெற்று விடுவாய். சந்தோஷ மனிதனாக மாறிவிடுவாய் பிறகு எந்த சமுதாயத்தையும் , எந்த பூசாரியையும் நம்பி இருக்க மாட்டாய். *விளையாட்டாக வாழ்! விருப்பட்டதை செய்!! வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும்!!!*
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர். குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர்.
ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப்படும் போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது. தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர். சிட்டுக்குருவி, பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது. கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டது.
நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது! ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர். எனக்குத் தெரிந்ததெல்லாம், நீ தான் எங்களைக் காப்பவர்! எங்களைக் காப்பதையும், அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன் என்றது குருவி!
*"காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது”* இது ஒன்றே ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன பதில். குருவிக்கும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்கள் அர்ஜுனனுக்கு விளங்கவே இல்லை. போருக்கு முன், ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார். அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்! போரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி, தனக்கு சாரதியாக மாறிய ஸ்ரீ கிருஷ்ணர் எதற்காக தன் வில்லையும், அம்பையும் கேட்கிறார் என்று புரிய வில்லை.
ஆனாலும் அவற்றை எடுத்து ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டான். ஸ்ரீகிருஷ்ணர், ஒரு யானை மீது அம்பைத் தொடுத்து, அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை அறுத்து எறிந்தார். யானையைக் குறி வைத்து, அதன் மீது அம்பை எய்து, அதனைக் கொல்ல முடியாமல், அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை மட்டும் அறுத்து எறிந்த ஸ்ரீ கிருஷ்ணரைக் கிண்டலாகப் பார்த்தான் அர்ஜுனன். ஸ்ரீகிருஷ்ணரை விட தான் வில் வித்தையில் சாமர்த்தியசாலி என்னும் எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது!
மனிதன் தானே! நான் வேண்டுமானால் அம்பு எய்து, யானையை வீழ்த்தட்டுமா? எனக் கேட்டான் அர்ஜுனன். ஒரு புன்முறுவலுடன் வில்லையும், அம்பையும், அர்ஜுனனிடம் கொடுத்து, பத்திரமாகத் தேருக்குள் வைக்கச் சொல்லி விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்! பிறகு ஏன் யானை மீது அம்பை எய்தீர்கள்? எனக்கேட்ட அர்ஜுனனிடம், அப்பாவி சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்துப் போட்டதற்கு யானைக்கான தண்டனை இது என்று மட்டும் சொன்னார் பகவான்! அர்ஜுனனுக்கு பகவான் சொன்னது எதுவும் விளங்க வில்லை!
போர் நடந்து, பாண்டவர்கள், 18-ம் நாள் யுத்தத்தில் வென்றும் விட்டனர். அர்ஜுனனுடன் பரமாத்மா க்ருஷ்ணன் போர்க்களத்தை சுற்றி வருகிறார்! தான் முன்பு அறுத்து எறிந்த யானையின் மணிக்கருகில் வந்து நின்ற பகவான். ஹே அர்ஜுனா! இந்த மணியைத் தூக்கி ஓரமாகப் போடுகிறாயா? என்று கேட்கிறார்! எத்தனையோ முக்கியக் காரியங்கள் இருக்கும் போது, இப்போது அறுந்து போய்க் கிடக்கும் இந்த மணி தான் பகவானுக்கு முக்கியமாகப் போய் விட்டதோ? என்று எண்ணினாலும், அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னபடி, மணியைக் கையில் எடுத்தான்.
அந்த மணிக்குள் இருந்து ஒரு தாய் சிட்டுக் குருவியும், நான்கு குஞ்சுகளும் சந்தோஷமாகப் பறந்து சென்றன. தாய்க்குருவி, ஸ்ரீபகவானை வலம் வந்து, 18 நாட்களுக்கு முன் தான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அபயம் வேண்டியதையும், யானையின் மணிக்குள் தன் குடும்பத்தை வைத்து பகவான் 18 நாட்கள் தங்களுக்கு அபயம் அளித்ததையும் நன்றியோடு எண்ணி சிறகைக் கூப்பியது. பகவானே! என்னை மன்னித்து விடு! உன்னை மானுட உருவில் பார்த்துப் பழகியதால் , நீ உண்மையில் யார் என என் சிற்றறிவுக்குக் கொஞ்ச காலம் புலப்படாமல் போய் விட்டது! என்று கைகூப்பித் தொழுதான் அர்ஜுனன். அண்டசராசரத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எப்படி இரட்சிக்க வேண்டும் என்பது பகவானுக்கு நன்குத் தெரியும்! அவனிடம் சரணாகதி அடையுங்கள்! மற்றதை அவனிடம் விட்டு விடுங்கள்.
பரித்ராணாய சாதூனாம், விநாசாய சதுஷ்கிருதாம், தர்ம சம் ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே. *"சரணாகதி நீயேகதி"* என்று சரணடைவோம் மற்றவை நம்மை படைத்தவனின் பொறுப்பு.
இந்த உலகத்தையே ஆளுகின்ற அதிகாரம் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான் ஒரு மன்னன். தன் குருவிடம் சென்று அதற்கு வழியும் கூறுமாறு கேட்டான். குருஜி, மன்னனுக்கு புத்தி புகட்ட விரும்பினார். அவர் அரசனிடம், சொல்கிறேன். அதற்கு முன்பு எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றார். அரசன் ஆவலுடன், சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என்றான். ஒன்றுமில்லை, இந்த செப்புக்குடுவையை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பித் தருவாயாக! என்றார்.
அட! இதென்ன பெரிய விஷயம் என்று எண்ணியபடியே, பணியாளரை அழைத்தான். அவரிடம், பொற்காசுகள் நிறைந்த பட்டுத்துணி மூட்டை ஒன்றைத் தந்து அந்தக் குடுவையை நிரப்பச் சொன்னான். அவரும் பொற்காசுகளை அந்தக் குடுவையில் கொட்டினர். குடுவை நிறையவேயில்லை! அது மிகவும் சிறியதுதான். போடப்போட பாதிக்குமேல் காலியாகவே இருந்தது. இன்னும் நிறையக் காசுகள் கொட்டப்பட்டன. அதுவோ நிறையாமலே இருந்தது.
குருஜி, என்ன அரசரே, இந்த சின்னக் குடுவையை நிறைக்க முடியவில்லையா? என்று கேலியாகக் கேட்டார். மன்னனுக்கு அவமானமாகிவிட்டது. கஜானாவிலிருக்கும் பொற்காசுகள், மற்றும் விலையுயர்ந்த மணிகள் எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னான். அனைத்தையும் போட்டாகிவிட்டது. அப்போதும் அந்த மாயப்பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவும் காலியாகிவிட்டது. மன்னன் மனம் கலங்கினான். உடலும் உள்ளமும் ஓய்ந்து போனது.
ஐயா, இது என்ன மாயம்? என்ன பாத்திரம் இது? என் மொத்த கருவூலமும் காலியாகி விட்டதே! பாத்திரம் மட்டும் நிறையவே இல்லையே? என்று கலங்கிப்போய்க் கேட்டான். அரசே, இது மனித மனத்தின் ஆசை என்ற பொருளினால் செய்யப்பட்ட குடுவை! இதை நிரப்பவே முடியாது! ஆசைக்கு ஏது அளவு? என்றார். மன்னனுக்குப் புரிந்தது. அவன் குருவை வணங்கினான். மனம் தெளிவு பெற்றது.
ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க, ஒரு சிற்பியை அணுகி சென்றார். அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர், சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்தார்
உடனே பணக்காரர், ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள்? இல்லை இந்த இரண்டு சிலைகளும் வேறு வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா? என்று சிற்பியிடம் கேட்டார்.
சிற்பி சிரித்துக் கொண்டே இல்ல ஐயா கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது என்றார். பணக்காரர் ஆச்சரியத்துடன் என்ன சொல்றீங்க மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை. எந்த பாகமும் உடையக்கூட இல்லையே எனக் கேட்டார். அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது பாருங்கள் என்றார் சிற்பி.
ஆமாம்.., அது சரி, இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள்? என்று கேட்டார் பணக்காரர். இது கோவில் கோபுரத்தில் நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி.
பணக்காரர் வியப்புடன் நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய் முட்டாள் என்றார்.
அந்த சிலையில் கீறல் இருப்பது எனக்கு தெரியுமே, எப்போது அந்த கோவில் வழி சென்றாலும் எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே. அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன் என்றார் சிற்பி.
*நீதி:-*
அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே உன் மனத்திருப்திகாக வேலை செய்.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் பக் இல்லாம ரிலீஸ் பண்ணினா இந்த ஜென்மத்துக்கு அது வராது அவன் known bugsன்னு சொல்லியே ரிலீஸ் பண்ணுவான்....patch update அப்புறம் retired, no more service தான்...
ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது.
சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்கு உள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது.
அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.
முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான்.
இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான்.
இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.
ஆரஞ்சு பழம் இருக்கு கீதா, கொஞ்சம் ஜூஸ் போட்டு கொடு, வெளியே என்ன வெயில், என்றபடி ரமேஷ் உள்ளே வர , ஆதித்யாவும், அம்மாம் அம்மா வெரி ஹாட் எனக்குப் பசி வேற என்று ஓடினான்.
பழங்களை எடுத்து சாறு பிழிந்த போது மனதுக்குள் ஒரே சஞ்சலம். சே இவர் ஏன் இப்படி இருக்கிறார். இரண்டு மணி நேரம் பிள்ளைய கூட்டிட்டு இந்த வெயில் சந்தைய சுற்றி வந்து அது இதுன்னு வாங்கி இருக்கார், வழியில் பிள்ளைக்கு ஜூஸ் இல்லை டிபன் வாங்கி கொடுத்து இருக்கலாமே, அவன் குழந்தை தானே. யாருக்காக இப்படி சேர்க்கிறார், பணத்தை செலவழிக்காம்மல் கொட்டி வச்சி என்ன பயன் என்று மனதுக்குள் குமைந்தாள்.
எங்க எங்கெல்லாம் போயிட்டு வந்திங்க வழில எதாவது சாப்பிட்டிருக்கலமே? என்றபடி ஜூசை நிட்டினாள். கடன் வாங்க தான் போன்னேன் கீதா. அடுத்த வாரம் புது கம்பெனி ஒண்ணு மெட்டல் பாக்ஸ் லாஞ்ச பண்ணுது. 6 லட்சம் டெபாசிட் பண்ணனும். நானா சேட்கிட்ட வாங்கினேன். என்ன ?!!!! அவள் திடுகிட்டாள். கடன் வாங்க எதுக்கு பையனை அழைச்சிட்டு போனிங்க.
அவனுக்கு கஷ்டம் நஷ்டம் தெரியனும் கீதா. பணம் என்கிறது பாடுபட்டு தேடுற விஷயம்னு புரியணும். கார் இருந்தாலும் பஸ், ஸ்கூட்டர்ன்னு, அழைச்சிட்டு போறேனே ஏன்? பணம் இருந்தாலும் இல்லைனாலும் அவன் நம்பிக்கையுடன் வாழ வேண்டும். போராட கத்துக்கணும் என்ற கணவனை நெகிழ்ச்சியுடன் பார்த்தாள்.
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள். அங்கு வந்த அவளின் தாய், நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள். பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள். தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்.
உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள், அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள். நீஙகள் யாராக வேண்டும் மானாலும் இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம். அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும். நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம். எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்.
*மனக்கணக்கு தவறலாம். மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.*
சிவா எங்கே இருக்கீங்க? கேட்டவர் பெரிய தொழிலதிபர் மாணிக்கம். வீட்லதான் சார். நான் உங்க ஆபீஸ் வாசலில் தான் வெயிட் பண்றேன்.
சீக்கிரம் வாங்க. உங்க கிட்டே ஒரு முக்கியமான வேலையை ஒப்படைக்கணும். அதுக்கு அட்வான்ஸா அம்பதாயிரம் ரூபாயை இப்ப வந்து வாங்கிக்கங்க.
இதோ வர்றேன் சார்.
அடடா... நாம பணக்கஷ்டத்தில் இருக்கோம்னு கடவுள் நமக்காக ஒரு ஆளை உதவி செய்ய அனுப்பியிருக்கார் என்று நினைத்தபடி வண்டியை எடுத்தான் சிவா. வரும் வழியில் ஓரிடத்தில் கசகசவென்று கூட்டம். சிவா தன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தான். அங்கே பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையன் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான். ஏங்க பையன் யாரு? என்னாச்சு? தெரியல.
அரை மணி நேரமாச்சு. இன்னும் வரல பேசாம நாமளே கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்துடுவோமா? அய்யய்யோ அங்கே சார் வேற வெயிட் பண்ணிக்கு இருக்காரே. அவர் கொடுக்கறதா சொன்ன பணத்தை வச்சுத்தான் இன்னைக்கு சில கமிட்மென்ட்டை செட்டில் பண்ணலாம்னு நினைச்சேன்
இப்படி பல யோசனைக்கு பின் ஒரு முடிவுக்கு வந்தான் சிவா.
ஒரு ஆட்டோவை நிறுத்தியவன் யார் உதவிக்கும் காத்திராமல் அந்த பையனை தூக்கி ஆட்டோவில் கிடத்தி ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் சேர்த்தான். அப்போது சிவாவின் போன் மீண்டும் அலறியது. மாணிக்கம்தான் அழைத்தார். ஹலோ சிவா. இன்னும் வரலையா? சாரி சார். வரும் வழியில் ஒரு ஆக்ஸிடென்ட். ஒரு பையன் அடிபட்டு கிடந்தான். அவனை அப்படியே போட்டுட்டு வர மனசு வரல. அதான் மருத்துவமனைக்கு கொண்டு வந்தேன்.
முட்டாள் மாதிரி பேசாதீங்க. எனக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா? அதையெல்லாம் விட்டுட்டு உங்களுக்காக இங்கே காத்திட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா சமூக சேவை செஞ்சிட்டு இருக்கீங்க. உங்க ஆர்டரே வேண்டாம்.
கேன்சல் பண்ணிக்குவோம். நான் கிளம்பறேன். சார் ஒரு நிமிஷம் என்று பரிதாபமாக சொன்னவனை கண்டுக்காமல் எதிர்முனை பட்டென்று கட் ஆனது.
மருத்துவமனையில் பார்மாலிட்டியை முடித்ததும் வீட்டுக்கு கிளம்பினான்.
வேலை ஓடவில்லை. அடிபட்ட பையன் நிலைமை எப்படி இருக்கோ என்று நினைத்தவன் திரும்பவும் மருத்துவமனைக்கு போனான். அங்கு மாணிக்கம் நின்றார். அங்கிருந்த வார்டு பாய் மாணிக்கத்திடம் சிவாவை கைகாட்டி,
சார் காலைல உங்க பையனை இங்கே கொண்டு வந்து சேர்த்தது இவருதான் சார் என்றார். மாணிக்கம் கண்கள் கலங்கியபடி சிவாவின் கையை பிடித்தார் ரொம்ப நன்றி சிவா. நீங்க காப்பாத்துனது என் பையனைத்தான். நான் அப்படி பேசியது தவறு தான்.
என்னை மன்னிச்சுக்கங்க. இந்தாங்க அம்பதாயிரம் ரூபாய். வச்சுக்கங்க.
இந்த பணம் வேலைக்கு அட்வான்ஸ் இல்லை. என் பையனை காப்பாத்தினதுக்கு. மன்னிக்கணும். நான் மனிதாபிமான அடிப்படையில்தான் இந்த உதவியை செய்தேன். பணத்தை எதிர்பார்த்து அல்ல. அப்படின்னா வேலைக்கு அட்வான்ஸா வச்சுக்கங்க. இல்லே சார். உங்க மகன்னு தெரிஞ்சதால நீங்க இப்படி பேசுறீங்க. வேறு ஆளா இருந்திருந்தா எனக்கு இந்த வேலையை கொடுத்திருக்க மாட்டீங்க. என் நியாயத்தையும் காது கொடுத்து கேட்டிருக்க மாட்டீங்க... ஆனால் நான் உங்க பையனை யார்னே தெரியாமத்தான் இங்கே கொண்டு வந்து சேர்த்தேன்.
என்னை பொறுத்தவரைக்கும் மனித உயிரைவிட பணம் முக்கியமில்லை. இப்ப நீங்க கொடுக்கற இந்த வேலையே உங்க பையனை காப்பாத்தியதால்தானே தவிர, என் மனிதாபி மானத்துக்காக இல்ல... அதனால இந்த வேலையை நான் செய்யறதா இல்லை. என்னால உங்க அரை மணி நேரத்தை திருப்பி கொடுக்க முடியாதுதான்.
ஆனால் உங்க அரை மணி நேரம் எந்த உயிரையும் திரும்ப கொண்டுவந்திடாது சொல்லிவிட்டு திருப்தியுடன் நடந்தான் சிவா.
அந்த முதியவர் தட்டுத் தடுமாறியபடி தெருவில் நடந்து கொண்டிருந்தார். எனது டூ வீலரை நிறுத்தி, அருகில் சென்று பார்த்தேன். அவரது காலில் கட்டை விரல் நசுங்கி ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. என்னங்க ஆச்சுனு கேட்டேன். வேகமாக வந்த ஆட்டோ சக்கரம் காலுல ஏறிடுச்சு என்றார். வாங்க..., எனக்கு தெரிந்த டாக்டர் பக்கத்துலதான் இருக்கார், கட்டுப் போட்டு மொதல்ல ரத்தம் கசியறத நிறுத்தணும். கூடவே டி.டி இஞ்செக்ஷனும் போட்டுக்கலாம்! என்றேன். வேண்டாம் என்று மறுத்தவரை விடாப்பிடியாக அழைத்து சென்றேன்.
எல்லாம் முடியவும்..., மணி என்ன, நேரமாயிடுச்சே, நேரமாயிடுச்சே...! என்று பறந்தார் பெரியவர். அப்படி என்னங்க அவசரம்..?! என்றேன் நான். என் பெண்டாட்டி பசியோட வீட்டில இருக்கா. அவளுக்கு இட்லி வாங்கிட்டு போகணும்..! என்றார். என்ன பெரியவரே..., உங்க காலுல அடிப்பட்டிருக்கு..., இப்ப இட்லியா முக்கியம்...?! லேட்டா போன தான் என்ன..., திட்டுவாங்களா...?! என்று சீண்டினேன். அதற்கு அவர் அவ அஞ்சு வருஷமா மன நிலை பாதிச்சு நினைவில்லாம இருக்கா. எல்லா ஞாபகமும் போயிடுச்சி! நான் யார்னு கூட அவளுக்குத் தெரியாது...! என்றார்.
நான், அப்படிப்பட்டவங்க உங்களை ஏன் லேட்டுன்னு எப்படி கேப்பாங்க...? அவங்களுக்குத் தான் உங்களை யாரென்றே தெரியாதே! கவலை படாதீங்க என்றேன். அதற்கு அந்த முதியவர் புன்னகைத்த படியே என்னை பார்த்து சொன்னார் ஆனா அவ யாருன்னு எனக்குத் தெரியுமே. *இது தான் தார்மீகத் தாம்பத்யமோ..?!!*
இதுதான் நம் அடையாளம். நம் அடையாளத்தை இழக்காமல் இருக்க நம் சந்ததிகளுக்கு அன்பை போதியுங்கள்.
ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.
நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார். பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.
வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையான ஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.
சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு. பத்து பைசாவை கொடுத்து கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வான்னாரு. சரிங்க அய்யான்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.
பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்கன்னாரு.
கொஞ்சம் பொறுங்கன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக் காரனை கூப்பிட்டாரு. அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான். சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்னான். அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வான்னாரு. உடனே பாத்துட்டு வர்றேன்னு அவனும் கிளம்பிட, பாத்திங்களா, என் ஆளன்னாரு. மொத ஆளு எப்பா உன் ஆளுதான் அருமைனு தோல்விய ஒத்துகிட்டாரு.
அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட, என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்லன்னான்.
எப்படி சொல்றேன்னான் அடுத்தவன். பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமான்னான்.
ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது. ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன் என்றது.
பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு, என்றார் சாது.
தலையசைத்து விட்டு பறந்தது பறவை. பக்கத்தில் இருந்த சீடனிடம் பேசினார் சாது. சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்து விட்டோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும், என்றார் சாது.
ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது. ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன். இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன், என்றது பறவை. பறவையே! இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார் சாது.
பதினைந்து நாட்கள் ஓடிப்போனது. மீண்டும் பறவைகள் திரும்ப வந்தன. ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம். தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள், என்றது பறவை.
சாது யோசித்தார். கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம் கொடுத்தார். பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும். அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள், என்றார் சாது.
பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன. ஐயா! உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம், என்றது பறவை. பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா? என்று கேட்டார் சாது... பறவை பேசியது.
ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது. ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் குச்சியை நாங்கள் சுமக்க வில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது, என்ற உண்மை புரிந்தது, என்று சொல்லி விட்டு பறந்தது பறவை.
சாதுவைப் பார்த்தான் சீடன். சாது பேசினார். சீடனே! பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது. அதற்குக் காரணம் *துணை*. ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை. இலக்கை அடைய ‘குச்சி' என்ற கருவி அவசியமாகிறது. அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது. ஆனால், அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது. பறவைகளுக்கு குச்சியைப் போல மனிதர்களுக்கு *இல்லறம்* கருவியாகிறது. ‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை. *இல்லறம்* என்ற குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம், என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.
குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், ‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'. இதைப் போல, கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், உண்மையில் இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது. *இதுவே இல்லற ரகசியம்.*
ஒரு ஊரில் ஒரு இளம் பெண் பால் விற்று ஜீவியம் செய்து வந்தாள். அவள் தினமும் தன்னிடம் இருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள். தான் ஏழையாக இருப்பதனாலே இப்படி தினமும் பால் விற்று சீவிக்க வேண்டி உள்ளது என் போன்ற மற்றப் பெண் கலெல்லாம் விதம் விதமாக ஆடை அணிந்து எடுப்பாகச் செல்கிறார்களே என தன்னுள் கவலையுடன் இருந்தாள்.
ஒரு நாள் அவள் வழமைபோல் பாலைக் கறந்தெடுத்து குடத்தினுள் விட்டு அதனை விற்பதற்காக தெரு வீதி வழியே சென்று கொண்டிருந்த போது தன் வாழ்க்கைத் தரத்தை எப்படி முன்னேற்றலாம் என கற்பனை செய்தாள்.
இன்று பாலை விற்று வரும் பணத்தில். சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன். அவை வளர்ந்து பெரிதானதும், அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன். அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன். அவற்றைக் கொண்டு ஒரு பெரிய மாட்டுப் பண்ணை வைப்பேன். அதில் வேலை செய்ய பல பெண்களை வேலைக்கு அமர்த்துவேன்.
வருமானம் பெருகவே பலவிதமான ஆடை அணிகளையும் நகைகளையும் வாங்கி அவற்றை அணிந்து கொண்டு மற்றப் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து அதிசயிக்கக் கூடியதாக உல்லாசமாக இப்படி நடப்பேன் என தலையில் பால் குடம் இருந்ததை மறந்து அதைப் பிடித்திருந்த கையை எடுத்து விசுக்கி ஸ்ரையிலாக நடக்க ஆரம்பித்தாள்.
என்ன பரிதாபம் அவள் நடந்த நடையில் தலையில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது. குடமும் உடைந்தது. அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன். பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போதுதான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது என்பதை உணர்ந்தாள். எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும், அதை முதலில் கவனமாக முடிக்க வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே.
*நீதி:-* செய்யும் செயலில் அவதானம் (கவனம்) வேண்டும். இல்லையேல் பெருநஷ்டம்.
அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று சொல்லி இருக்கிறார்
1965 ஆம் ஆண்டில் வெளி வந்து மக்கள் மனதில் நீங்க இடம் பெற்ற‘திருவிளையாடல்’ படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தற்போது புது ப்பிக்கப்பட்டு உள்ளது. கலரையும் மெரு கூட்டியுள்ளனர். ஏ.பி.நாகராஜன் அவர்கள் கதை, வசனம் எழுதியும் இயக்கி வெளிவந்த திருவிளையாடல் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ், முத்துராமன், பாலையா, டி.ஆர். மகாலிங்கம், கே.பி. சுந்தாரம்பாள், மாஸ்டர் பிரபாகரன், மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சிவாஜி, சாவித்திரி நடித்த ‘திருவிளையாடல்’ படம் 1965-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. செண்பகபாண்டியனாக முத்துராமன், புலவர் தருமியாக நாகேஷ். மனோரமா அவ்வையாராக, கே.பி.சுந்தராம்பாள், ஹேமநாத பாகவதராக டி.எஸ்.பாலையா, பானபட்டராக டி.ஆர். மகாலிங்கம் ஆகியோரும் நடித்து இருந்தனர். ஏ.பி. நாகராஜன் டைரக்டு செய்து இருந்தார்.
“கடைசிக் குடிமகனிலிருந்து உலககைக் காக்கும் ஈசன் குடும்பம் வரை பெண்ணாகப் பிறப்பது பெரும் தவறு என்பது நன்றாகப் புரிந்துவிட்டது” – இப்படிச் சொன்னவர் பரமசிவனின் மனைவி பார்வதி. அவரை இப்படி பேச வைத்தவர் ஏ.பி.நாகராஜன். “ஒருத்தி என் தலையிலே ஏறி உட்கார்ந்துக்கிட்டு இறங்கமாட்டேங்குறா.. இன்னொருத்தி என் உடம்புல பாதியை எடுத்துக்கிட்டு பிராணனை வாங்குறா” என்று இருதார மணவாளரான பரமசிவனை புலம்பவைத்தவரும் ஏ.பி.நாகராஜன்தான். இரண்டும் திருவிளையாடல் படத்தில் அவர் எழுதிய வசனங்கள். கொங்கு மண்டலத்தில் வளமான நிலவுடைமையாளர் குடும்பத்தில் 1928 பிப்ரவரி 24ந் தேதி பிறந்தவர் அக்கம்மாபேட்டை பரமசிவன் நாகராஜன் (ஏ.பி.நாகராஜன்). அவருக்கு வைக்கப்பட்ட பெயர், குப்புசாமி. இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த அவரை பாட்டி மாணிக்கம்மாள்தான் வளர்த்தார். அதனால் சின்ன வயதிலேயே புராண-இதிகாசக் கதைகளை கேட்டு வளரும் வாய்ப்பு அமைந்தது. அது அவரைக் கவர்ந்தது. அவ்வை டி.கே.சண்முகம் நாடகக்குழுவில் சேர்ந்தார். அங்கே நிறைய குப்புசாமிகள் இருந்ததால், அவரது பெயர் நாகராஜன் என மாற்றப்பட்டது. குடும்பத்தினரைப் பிரிந்து ஊர் ஊராகச் சென்று நாடகங்களில் நடித்தார் நாகராஜன். ஸ்த்ரீபார்ட் எனப்படும் பெண் வேடங்களில் நடித்தார். சக்தி நாடகசபாவில் அவர் சேர்ந்தபோது நடிகர்திலகம் சிவாஜிகணேசன், காகா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் நண்பரானார்கள். பின்னர், பழனி கதிரவன் நாடக சபா என்ற சொந்த நிறுவனத்தை ஆரம்பித்து நாடகங்களை அரங்கேற்றியதுடன் ராணி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் நாகராஜன். அவர் எழுதி அரங்கேற்றிய ‘நால்வர்’ என்ற நாடகம் 1953ல் திரைப்படமானது. அவரே திரைக்கதை எழுதியதுடன், கதாநாயகனாகவும் நடித்தார். படம் வெளியானபின் அவரை ஒரு பத்திரிகை பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் தன் அப்பா பற்றியும் சொந்த ஊரான அக்கம்மாபேட்டை பற்றியும் தெரிவித்திருந்ததைப் படித்த அவரது சொந்தபந்தங்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை அடையாளம் கண்டு, நேரில் சந்தித்தனர்.
மாங்கல்யம், நல்லதங்காள் உள்ளிட்ட படங்களிலும் ஏ.பி.நாகராஜன் நடித்துவந்தார். எனினும், நடிப்பைவிட படைப்பில்தான் அவருக்குத் தீவிர ஆர்வம் இருந்தது. மேடை நாடகத் தமிழில் திரைப்பட வசனங்கள் அமைந்திருந்த காலத்தில், கொங்கு வட்டார வழக்கில் ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தில் வசனம் எழுதினார் ஏ.பி.என். ‘நான் பெற்ற செல்வம்’ படத்திலும் அவரது படைப்பாற்றல் வெளிப்பட்டது. தமிழில் வெளியான மிக நீளமான படங்களில் ஒன்று, ‘சம்பூர்ண ராமாயணம்’. 1958ல் வெளியான இப்படத்திற்கு, திரைக்கதை-வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன். ராமராக என்.டி.ராமராவும், பரதனாக சிவாஜியும், ராவணனாக டி.கே.பகவதியும் நடித்த படம் இது. ராமன்தான் கதாநாயகன் என்றாலும் ராவணனின் பெருமைகளைச் சொல்ல ஏ.பி.என் தவறவில்லை. அவன் திறமையான மன்னன் மட்டுமல்ல, சிறந்த வீணைக் கலைஞன் என்பதையும் அவனது அவையில் ராகங்களைப் பற்றி அலசும் அருமையான பாடல் ஒன்றின் மூலம் வெளிப்படுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக, ராவணனுக்கு 10 தலைகளை ஒட்டவைத்து அரக்கனாகக் காட்டாமல், நம்மைப்போல ஒற்றைத்தலையுடன் ‘சம்பூர்ண ராமாயணத்தில்’ உலவவிட்டிருந்தனர். இந்தப் படம் பெற்ற வெற்றியும், அதற்கு மூதறிஞர் ராஜாஜி அளித்த பாராட்டும் ஏ.பி.நாகராஜனுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. நடிகர் வி.கே.ராமசாமியுடன் இணைந்து சொந்தமாகப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான முதல் படம், ‘வடிவுக்கு வளைகாப்பு’ (1962) ஏ.பி.நாகராஜன் என்ற இயக்குநரைப் பார்த்து தமிழ்த்திரையுலகமும் ரசிகர்களும் முதன் முதலாக வியந்தது, ‘நவராத்திரி’ படத்தில்தான் (1964). ஒன்பது மாறுபட்ட வேடங்களில் நடிகர் திலகம் சிவாஜி நடித்த அப்படம் பெரும் வெற்றி பெற்றது. 1965ல் ‘திருவிளையாடல்’ படம் வெளியாகி சக்கைப் போடு போட்டது. பரமசிவன், பார்வதி, முருகன், பிள்ளையார், நாரதர், அவ்வையார், நக்கீரர் என அனைத்து கதாபாத்திரங்களின் நாவிலும் அழகுத் தமிழ் விளையாடியது. ஒரு புராணப் படத்தில் அமைந்த நகைச்சுவை காட்சி, இன்றைய தலைமுறையையும் சிரிக்க வைக்கிறது என்றால் அது திருவிளையாடல் படத்தில், தருமி வேடத்தில் நடித்த நாகேஷின் அற்புதமான உடல்மொழியுடன் கூடிய நகைச்சுவை காட்சிதான். கடவுளான பரமசிவனையே கலாய்த்துத் தள்ளியிருப்பார் தருமி. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்த்திரையில் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பி வந்தகாலத்தில் அதற்கு நேர்எதிராக புராணப் பாத்திரங்கள் மூலம் ‘தெய்வ’ங்களைத் தமிழ்ப பேச வைத்தவர் ஏ.பி.நாகராஜன். அவர், திராவிட இயக்கத்திற்கு எதிராக சிலம்புச்செல்வர் ம.பொ.சி. தொடங்கிய தமிழரசுக் கழகத்தில் இணைந்திருந்தார். அதனால், அவருடைய படைப்புகளிலும் அது வெளிப்பட்டது. தி.மு.கவில் மு.கருணாநிதியை கலைஞர் என்று அழைத்ததுபோல தமிழரசு கழகத்தில் ஏ.பி.நாகராஜனை ‘கலைஞர்’ என்று அடைமொழியிட்டு அழைத்தனர். அங்கே ‘கவிஞர்’ கண்ணதாசன், இங்கே ‘கவிஞர்’ கா.மு.ஷெரீப். இரண்டு இயக்கத்திற்குமான போட்டியில், திரையில் செம்மையாக ஒளிர்ந்தது, தமிழ். திருவிளையாடலைத் தொடர்ந்து, சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமலை தென்குமரி, அகத்தியர், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல புராண படங்களை எடுத்தார் ஏ.பி.நாகராஜன். எல்லாவற்றிலும் அவருடைய தமிழ் விளையாடியது. அவருடைய மிகச்சிறந்த படைப்புகளின் வரிசையில் முதல் இடம் பிடிப்பது, ‘தில்லானா மோகனாம்பாள்’. இது புராணமல்ல, புதினம். கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதையைத் திரைக்கு ஏற்றபடி நாகராஜன் வடிவமைக்க, நாதசுர கலைஞர் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜியும், பரதநாட்டிய கலைஞர் திருவாரூர் மோகனாம்பாளாக பத்மினியும் வாழ்ந்து காட்டியிருந்த படம் அது. கலைஞர்களின் வாழ்வை மிகச் சிறப்பான காட்சியமைப்புகள் மூலமாக வெளிப்படுத்திய தில்லானா மோகனாம்பாள் படத்தில் பாலையா, மனோரமா, நாகேஷ் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் தங்கள் பங்கினைத் திறம்பட வெளிப்படுத்தி, படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தனர். சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருதையும் தில்லானா மோகனாம்பாள் பெற்றது. பிற்காலச் சோழ மன்னர்களில் பெரும்புகழ் பெற்றவரான முதலாம் ராஜராஜனின் வரலாற்றை, தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமான ‘ராஜராஜசோழன்’ என்ற பெயரில் இயக்கியவரும் ஏ.பி.நாகராஜன்தான். குருதட்சணை, வா ராஜா வா, குமாஸ்தாவின் மகள், மேல்நாட்டு மருமகள் போன்ற படங்களையும் இயக்கினார். நடிகர் திலகம் சிவாஜியை வைத்து பலப்பல படங்களை இயக்கிய ஏ.பி.நாகராஜன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை இயக்கிய ஒரே படம், ‘நவரத்தினம்’ அதுவே ஏ.பி.என்னின் கடைசிப்படமாகவும் அமைந்தது. 1977ல் அவர் காலமானார். இன்றும் கோவில் திருவிழாக்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஒ(லி)ளிபரப்பாகும் திருவிளையாடல் படத்தின் வசனங்களில் உரக்க ஒலிக்கும் தமிழில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஏ.பி.நாகராஜன். சிவபெருமானின் திருவிளையாடல்களை மையப்படுத்தி இப்படம் தயாரானது,. சிவன் கேரக்டரில் சிவாஜி வந்தார். பார்வதி கேரக்டரில் சாவித்திரி நடித்தார். இப்படத்தில் புலவர் தருமியாக வரும் நாகேஷின் காமெடி வேடம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. புலவர் நக்கீரன் வேடத்தில் இயக்குனர் ஏ.பி.நாகராஜனே நடித்து இருந்தார். பிரமாண்ட அரங்குகள் அமைத்து மெகா பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்து இருந்தனர். இதில் இடம்பெற்ற ‘பழம் நீயப்பா ஞானபழம் நீயப்பா’, ‘இன்றொரு நாள் போதுமா’, ‘இசை தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’, ‘பார்த்தால் பசு மரம் படுத்துவிட்டால் நெடு மரம்’, ‘பாட்டும் நானே பாவமும் நானே’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின. திருவிளையாடல் படமும் சரி சிவாஜியின் பரிமாணமும் சரி இன்றுவரை யாராலும் மறக்க முடியாது.அந்தக் காலத்தில் திரை அரங்குகளை கலக்கி,பின்னாளில் திருவிழாக் காலங்களில் (தெருவோரத்தில் திரை கட்டுவார்களே) தெருவோரங்கங்களையும் கலக்கி எடுத்தப்படம்.பெரும்பாலான கோவில் திருவிழாக்களில் திருவிளையாடல் படம் போடும் நாளும் திருவிழாவாக கொண்டாடப்படும். என் சிறுவயது பருவத்தில் எனது கிராமத்தில் இதை நான் அனுபவித்திருக்கின்றேன்.என்னுள் என் ரத்தத்தில் ஊறிப்போன ஒருசிலப் படங்களில் திருவிளையாடலும் ஒன்று.அந்த பாதிப்புதான் இந்த உயிரோவியத்தை உருவாக்கவைத்தது. அந்தக்காலத்தில் பானப்பத்திரர் நேராக பாட்டுப்பாட வந்தார்..விறகு விற்பவன் (சிவன்) பாடலைக் கேட்டார்..பயந்து ஓடினார்..இப்போதான் காலம் மாறிப்போச்சே..நவீன டிஜிட்டல் காலமாச்சே..அதான் தொலைக்காட்சியில் சிவன் பாடலைக் கேட்டே பானப்பத்திரரை ஆட வைத்திருக்கிறேன்..ஹீ..ஹீ.. ( கலைஞர் "முரசு" தொலைகாட்சிக்காக..நான் உருவாக்கிய உயிரோவியம்) திருவிளையாடல் - புராணப் படங்களில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்த படம். புராணப் படமா? ஏ.பி.நாகராஜன் தான் செய்யணும்" என்ற அளவுக்கு அவருக்கு பெயரையும் புகழையும் வாங்கித் தந்த படம்.
1965-ஆம் ஆண்டு வெளிவந்த பிராந்திய மொழிப் படங்களில் தமிழில் சிறந்தபடமாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அரசின் சிறப்பு விருதினைப் பெற்ற படம்.
அதற்கு முன்பும் கூட புராணப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும் புதிய தலைமுறைக்கு ஏற்றபடி புதிய பாணியில் திரைக்கதை அமைத்து இயக்கி இருந்தார் ஏ.பி. நாகராஜன் அவர்கள். நடிகர் திலகத்தின் அபாரமான நடிப்பாற்றல் - நுணுக்கமான அசைவுகளைக் கூட துல்லியமாக அவர் வெளிப்படுத்தி நடித்த விதம் - சிவனாக வரும் காட்சிகளில் புருவத்தைக் கூட அசைக்காமல் நடித்த பாங்கு-அனைவரையும் பிரமிக்க வைத்தது. அதுவரை சமூகப் படங்களில் மட்டுமே கையாளப்பட்டு வந்த "பிளாஷ்-பாக்" உத்தியைக் கையாண்டு கதை பின்னப்பட்ட முதல் படம் திருவிளையாடல் தான். ஞானப் பழத்துக்காக கோபித்துப் பிரிந்து சென்று தனியாக இருக்கும் முருகனின் சினத்தைத் தணிப்பதற்காக பராசக்தி பரமனின் திருவிளையாடல்களில் சிலவற்றைக் கூறுவதாக கதை அமைத்திருந்தார் ஏ.பி.நாகராஜன். அதன்பிறகு வெளிவந்த புராணப்படங்கள், பக்திப் படங்கள் எல்லாமே இந்தப் பாணியிலேயே வர ஆரம்பித்தன என்பது கவனத்துக்குரிய விஷயம். இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் அமைத்த இசை . அதுவரை அவர் அமைத்த படங்களின் இசையையும் பாடல்களையும் எல்லாம் தூக்கி அடித்தது. பொதுவாக நடிகர் திலகத்திடம் ஒரு தனித்தன்மை உண்டு. அவர் நடிக்கும் படம் எதுவோ அது வெளிவந்த பிறகு அதில் வேறு எத்தனை சிறப்பம்சங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விஞ்சி அவரது நடிப்பு மட்டுமே பெரிதாகப் பேசப்படும். அதுதான் முன்னணியில் நிற்கும். ஆனால் திருவிளையாடல் படம் ஒரு விதிவிலக்கு. நடிகர் திலகத்தின் நடிப்புக்கு இணையாக படத்தில் பேசப்பட்ட விஷயங்கள் நாகேஷின் நகைச்சுவை நடிப்பும். படத்தின் பாடல்களும். இன்றளவும் நாகேஷ் காமெடி என்று எடுத்துக்கொண்டால் முதலிடம் பெறுவது திருவிளையாடல் தருமி தானே? அதே போல படத்தின் இசையும் மிகப் பிரமாண்டமாகப் பேசப்பட்டது. "அய்யரின் இசையின் மகத்துவத்தை முழுமையாக உணர்த்திய படம்" என்று கே.வி. மகாதேவனின் உற்ற துணையாக இருந்த உதவியாளர் டி. கே. புகழேந்தி பெருமையாகக் குறிப்பிடுவார். அந்த அளவுக்கு இசையின் ஆக்கிரமிப்பு அதுவும் நடிகர் திலகத்தின் நடிப்புக்கு இணையாகப் பேசப்படும் அளவுக்கு இருந்தது. முதல் காட்சியிலேயே இசையின் ஆக்கிரமிப்பு துவங்கி விடுகிறது. கயிலாயத்தில் தேவரும், முனிவரும், நாரதரும், பூத கணங்களும் சிவபூஜை செய்யும் காட்சி. பலதரப்பட்ட இசைக்கருவிகளைக் கையாண்டு அருமையான தனி ஆவர்த்தனத்தை ஆதி தாளத்தில் வெகு அற்புதமாக அமைத்து மெய்சிலிர்க்க வைத்தார் கே.வி.மகாதேவன். சங்கீதத்தில் "காலப்ரமாணம்" என்று ஒரு சொல்வழக்கு உண்டு. தாளத்தில் அது மிக முக்கியமான் ஒரு அம்சம். அதன்படி ஒவ்வொரு வாத்தியத்தையும் கணக்கு பிசகாமல் கையாண்டு மகாதேவன் அமைத்திருக்கும் அந்த தனி ஆவர்த்தனமும் அதைத் தொடரும் சீர்காழியின் கணீர்க் குரலும். "சம்போ மகாதேவா" - என்ற ஒரே வரியை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி விரியவைத்து என்னமாய்த்தான் அமைத்திருக்கிறார் மகாதேவன்! நமது கர்நாடக சங்கீதத்தில் "யதி" என்று ஒரு அமைப்பு உண்டு. நாம் தமிழில் அணி என்கிறோமே அது போன்றது தான் இது. இது பலவகைப்படும்.. அவற்றில் "கோபுச்ச யதி" என்று ஒன்றும் "ச்ரோதோவக யதி" என்றும் ஒன்று உண்டு. "கோபுச்ச யதி" - என்றால் பசுவின் வாலைப்போல ஆரம்பத்தில் அகலமாக இருந்து போகப்போக குறுகி வரும் பாடல் அமைப்பு. முமூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதரின் ஆனந்த பைரவி ராக கீர்த்தனை "தியாகராஜ யோக வைபவம்" இதற்கு சரியான உதாரணம். "தியாகராஜ யோக வைபவம், அகராஜ யோக வைபவம். ராஜயோகவைபவம், யோக வைபவம், வைபவம், பவம், வம்" - என்று கீர்த்தனையின் ஆரம்பத்தில் இந்த கோபுச்ச யதிக் கிரமத்தை கையாண்டிருக்கும் தீட்சிதர். சரணத்தில் "ச்ரோதோவக யதி" வகையை அமைத்து முடித்திருக்கிறார்.
"ச்ரோதோவக யதி" - என்றால்..? எப்படி ஒரு ஆறு உற்பத்தியாகும் இடத்தில் ஆரம்பத்தில் குறுகியும், போகப்போக விரிந்தும் செல்லுகிறதோ அது போன்ற ஒரு ஆற்றொழுக்கு போன்ற பாடல் அமைப்புக்கு "ச்ரோதோவக யதி"என்று பெயர். மேலே குறிப்பிட்ட தீட்சிதர் கீர்த்தனையின் சரணத்தில் "பிரகாசம், தத்வப் பிரகாசம், சகல தத்வப் பிரகாசம்" என்று இந்த "ச்ரோதோவக யதி" கிரமம் அமைந்திருக்கிறது. இந்தச் "ச்ரோதோவக யதி" கிரமத்தைக் கையாண்டு தேவா மகாperson
Sun 2 Aug 2015 - 12:34
by anuradha
சம்போ மகாதேவா .. என்று பாடலின் ஒற்றை வரியை வைத்தே மோகன ராகத்தில் பாடலை அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன். சீர்காழி கோவிந்தராஜன் முடித்ததும் வீணையில் மோகன ராகத்தை கலைமகள் மீட்டுவதாக வரும் சஞ்சாரங்கள்... இப்படி எல்லாம் பாடலை இப்போது போடவேண்டும் என்றால் அதற்கு கே.வி. மகாதேவன்தான் மறுபடியும் பிறந்து வரவேண்டும். தொடர்ந்து பி.சுசீலாவின் குரலில் "நமச்சிவாய வாழ்க" என்ற மாணிக்கவாசகரின் சிவபுராண வரிகள்... "ஈசனடி போற்றி எந்தையடி போற்றி..." என்று தொடரும் அர்ச்சனைப் பதிகத்தை யஜுர் வேதத்தில் "யோபாம் புஷ்பம் வேதா" என்று துவங்கும் "மந்த்ர புஷ்பம்" - பகுதியை நினைவுறுத்தும் வகையில் மெட்டமைத்து திருவாசகத்தை தமிழ் வேதம் என்று கொண்டாடும் அளவுக்கு அற்புதமாக கையாண்டிருக்கிறார் கே.வி. மகாதேவன். ஞானப் பழத்துக்காக கோபமுற்று தாய் தந்தையைப் பிரிந்து செல்லும் முருகனை சாந்தப் படுத்தும் விதமாக அவ்வையாராக வரும் கே. பி.சுந்தராம்பாள் பாடும் ஞானப் பழத்தைப் பிழிந்து" என்ற தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் பாடலை இடையிடையே ஒற்றை வயலினைக் கையாண்டு காம்போதி ராகத்தில் ஆரம்பித்து, சாவேரி, மோகனம், கானடா என்று ராகமாலிகை விருத்தமாக வெகு சிறப்பாக அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன். தொடர்ந்து படத்தில் இடம் பெறும் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவியரசு கண்ணதாசன். "பழம் நீயப்பா" - பாடலில் முருகனுக்குகந்த ஷண்முகப்ரியா ராகம் தான் எத்தனை அழகாகக் கையாப்பட்டிருக்கிறது! பாடலின் இடையே வரும் இணைப்பிசையில் நம் மனதை அப்படியே கட்டிப்போட்டுவிடுகிறார் கே.வி.மகாதேவன். பி.பி.ஸ்ரீனிவாஸ் - எஸ். ஜானகியின் குரல்களில் "பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்" மகாதேவனின் இசையில் நடபைரவி ராகத்தில் கலந்து கேட்பவர் செவிகளை மட்டுமல்ல மனதையும் நிறைக்கிறது. இந்தப் பாடலில் நாதஸ்வரமும், புல்லாங்குழலும் தான் எவ்வளவு லாவகமாகக் கையாளப் பட்டிருக்கின்றன. நடபைரவியில் இத்தனை இனிமையாக - காலத்தை வென்று நிற்கும் அளவுக்கு ஒரு திரைப்படப் பாடலை வேறு யாராலுமே தரமுடியாது. இடைவேளைக்கு முன்வரும் சிவதாண்டவத்திற்கு மகாதேவன் அமைத்திருக்கும் இசை . உண்மையிலேயே மகாதேவ தாண்டவம் தான். தாள வாத்தியங்களில் ஆதிக்கம் நிறைந்திருந்தாலும் வயலினில் ஹம்சானந்தி ராகத்தை பளிச்சென்று மின்னல் போல வெளிக்காட்டி மறைக்கும் லாவகம் - கே.வி. மகாதேவனால் மட்டுமே சாத்தியம். "நீலச்சேலை கட்டிகிட்ட சமுத்திரப்பொண்ணு" - கண்ணதாசனின் நயமான வரிகள் விரகதாபத்தால் தவிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை எடுத்துக்காட்டுகின்றன என்றால் அதற்கு "பஹாடி"யில் மகாதேவன் அமைத்திருக்கும் மெட்டும் அதனை பி.சுசீலா பாடி இருக்கும் அழகும், நடிகையர் திலகம் வெளிப்படுத்தும் பாவங்களும் பாடலுக்கு தனி இடம் கொடுத்து விடுகின்றன.
அடுத்து "ஒரு நாள் போதுமா" .. பாடலுக்கு வருவோம். உண்மையிலேயே இந்தப் பாடலை கே.வி.மகாதேவன் அமைத்திருக்கும் அழகை - பாடலின் சிறப்பம்சங்களைப் பகிர்ந்து கொள்வது என்றால் அதற்கு ஒரு நாள் போதாது தான்.
வடநாட்டில் இருந்துவரும் ஹேமநாத பாகவதர் பாண்டியமன்னனின் சபையில் பாடுவதாக காட்சி. நாடெங்கும் உள்ள பாடகர்களை எல்லாம் வெற்றி கொண்ட ஆணவத்தில் மிதக்கும் ஹேமநாத பாகவதரை விறகுவெட்டியாக வரும் ஈசன் எப்படி தன்னிலை உணரவைக்கிறார் என்பது கதை ஆரம்பத்தில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைக்க விரும்பினார் ஏ.பி.நாகராஜன். ஆனால் தோல்வி அடையும் கதாபாத்திரத்துக்கு தான் பாடுவதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்த காரணத்தால் சீர்காழி கோவிந்தராஜன் தன்னால் பாட முடியாது என்று நயமாக மறுத்து விட்டார். சங்கீதத்தில் முடிசூடா மன்னனாக வரும் பாடகருக்கு ஒரு சங்கீத வித்வானையே பாடவைத்தால் என்ன என்று தோன்றியதும் அனைவருக்கும் ஒருமனதாக நினைவுக்கு வந்த பாடகர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் தான். அவரிடம் சென்று கதையமைப்பைக் கூறி ஹேமநாத பாகவதருக்காக அவர் பாடவேண்டும் என்று தயக்கத்துடன் கோரிக்கை வைத்தார்கள். "என்னது? தோற்றுப்போகும் சங்கீத வித்வானுக்கு நான் பாடணுமா? என்னை என்னவென்று நினைத்தீர்கள்?" என்றெல்லாம் கூச்சல் போடாமல் - சற்றுக்கூட முகம் சுளிக்காமல்,"அதுக்கென்ன தாராளமா பாடறேன்" - என்று எந்த ஒரு சங்கடமும் இல்லாமல் சம்மதித்தார் பாலமுரளிகிருஷ்ணா. கவியரசர் பாடலுக்கான பல்லவியை இப்படி எழுதிக் கொடுத்தார்: "நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா" இந்தப் பல்லவியை மேலே சொன்ன அதே "ச்ரோதோவகயதி" முறையைப் பின்பற்றி.. "ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா.. - என்று வரிக்கு வரி வார்த்தைகளைக் கூட்டி அமைத்த திறமையை என்னவென்று சொல்வது? அதே சமயம் இந்தப் பாடலுக்கு கே.வி. மகாதேவன் தேர்ந்தெடுத்த ராகமோ "மாண்ட்". கதைப்படி ஹேமநாத பாகவதர் வடநாட்டிலிருந்து வரும் ஒரு சங்கீத நிபுணர். பாண்டிய நாட்டுக்கு வருகை தந்து அரசவையில் பாட வருகிறார். யாருக்குமே அவரது சொந்த மண்ணுக்கு உரித்தான விஷயங்களில் தானே பிடிப்பு சற்று அதிகமாக இருக்கும். ஆகவே தான் ஹேமநாத பாகவதர் தன் பாடலை ஹிந்துஸ்தானி ராகமான மாண்ட்டில் ஆரம்பிக்கிறார். மாண்ட் - இது ஒரு ஹிந்துஸ்தானி ராகம். கேட்பவரை கிறங்கடிக்கும் வன்மை வாய்ந்த ஒரு ராகம். நமது தென்னக கர்நாடக இசையில் கச்சேரியின் பிற்பகுதியில் இடம்பெறும் துக்கடாக்களுக்கு பயன்படுத்தப் படும் ராகம். எம்.எஸ். அம்மா அவர்கள் பாடிப் பிரபலமடைந்த வள்ளலாரின் "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்" மாண்ட் ராகத்தில் அமைந்தது தான். அந்த ராகத்தில் துவங்கும் "ஒரு நாள் போதுமா" பாடலைக் கேட்டு வரகுண பாண்டியன் மட்டும் அல்ல. நாமுமே அல்லவா கிறங்கிவிடுகிறோம். சரணத்தில் "குழலென்றும் .." என்ற வார்த்தைக்கு பிறகு ஒரு சிறு ஆலாபனை, ஸ்வரம் என்று பாடிய பிறகு அந்த வார்த்தைக்கு தக்கபடி குழலிசையில் முடிப்பதும், அதே போல "யாழென்றும்.." என்ற வார்த்தைக்கு பிறகு வரும் ஸ்வரங்களை வீணையில் இசைத்து பிறகு இரண்டு வார்த்தைகளையும் இணைத்து பாடலைத் தொடர்வதும்..... கே.வி.மகாதேவனுக்கு மட்டுமே சாத்தியம்... கடைசி சரணத்தில் கவிஞர் ராகத்தின் பெயர்களை இணைத்து பாடல் வரிகளை அமைக்க அவற்றை முறையே தோடி, தர்பார், மோகனம், கானடா என்று அந்தந்த ராகங்களிலேயே அமைத்து ஒரு ராக முத்திரைப் பாடலாக அமைத்துவிட்டிருக்கிறார் கே.வி. மகாதேவன். இங்கு கையாண்ட ராகங்கள் அனைத்துமே தென்னாட்டுக்கு சொந்தமான கர்நாடக ராகங்கள் தான். ஹிந்துஸ்தானியில் மட்டும் தான் என்று இல்லை நான் உங்கள் கர்நாடக சங்கீதத்திலும் கரை கண்டவன் என்று ஹேமநாத பாகவதர் பறை சாற்றிக் கொள்வது போல வரிக்கு வரி ராகம் மாறும் பாடலாக அமைத்து கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப பாடலை அமைத்திருக்கும் விதம் அந்த கதாபாத்திரத்தை கே.வி. மகாதேவன் எந்த அளவுக்கு உள்வாங்கிக்கொண்டு இசை அமைத்திருக்கிறார் என்பதற்கு ஒரு சான்று. ஒரு இசை அமைப்பாளர் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு இந்தப் பாடலின் மூலம் ஒரு இலக்கணமே வகுத்துக்கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன் என்றால் அது மிகை அல்ல.
அடுத்து டி.ஆர். மகாலிங்கத்தின் கணீர்க் குரலில் இரண்டு பாடல்கள். இரண்டுமே சிறப்பான பாடல்கள்.
"இல்லாததொன்றில்லை" என்ற விருத்தம். இந்த விருத்தம் சிம்மேந்திர மத்யமம், ஹிந்தோளம் ஆகிய இரண்டு ராகங்களின் சேர்க்கையில் அமைந்தது. பீம்ப்ளாசில் அதாவது ஆபேரியில் - "இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை." - கவிஞர் இந்தப் பல்லவியை இறைவனுக்காக செய்தாரா அல்லது கே.வி. மகாதேவனை மனதில் வைத்துக்கொண்டு கொடுத்தாரா என்பது தெரியாது. ஆனால் இந்தப் பாடல் உண்மையிலேயே அரும்சாதனை தான். பாடலின் உச்சத்தில் பொங்கும் உணர்ச்சிப் பெருக்கும், அதை சிறப்பாக பிரதிபலிக்கும் வண்ணம் வரிகளுக்கிடையே இணைத்திருக்கும் இணைப்பிசையும் பாடலை சிகரத்தில் ஏற்றி நிறுத்திவிடுகிறது. இந்த மாதிரி ஒரு பாடலைக் கேட்டபிறகும் இறைவன் சும்மா இருப்பாரா?. பாணபத்திரருக்காக விறகு விற்க மட்டுமல்ல எதைச் செய்யவும் இறங்கி வரமாட்டாரா?
அப்படி விறகுவெட்டியாக வரும் இறைவன் பாடுவதாக அமைந்த "பார்த்தாப் பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்" - பாடல். சரியான நாட்டுப்புற மெட்டுப் பாட்டு. இந்தப் பாடலை வெற்றிப் பாடலாக மாற்ற மகாதேவனுக்கு கைகொடுத்த ராகம் சிந்துபைரவி. அடுத்து ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்குவதற்காக விறகு வெட்டியாக வந்த பரமன் அவர் தங்கி இருக்கும் மாளிகையின் வெளியே உள்ள திண்ணையில் வந்து படுத்துக்கொண்டு பாடுவதாக அமைந்த பாடல் "பாட்டும் நானே பாவமும் நானே".
டி.எம். சௌந்தரராஜன் அற்புதமாகப் பாடி இருக்கும் இந்தப் பாட்டுக்கு மகாதேவன் அமைத்த இசை .. உச்சத்தின் உச்சம். "கௌரி மனோகரி" ராகத்தைக் கையாண்டு இந்தப் பாடலை அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.
எச்சகச்ச முறை திருவிளையாடல் படத்தை டிவியில் பார்த்திருக்கிறேன். எண்ணிக்கை தெரியவில்லை. சோமெனி டைம்ஸ் டிவியில் பார்த்தும் சலிக்கவே சலிக்காத திரைப்படம் திருவிளையாடல். என்னதான் டிவியில் பார்த்தாலும் ஒரு திரைப்படத்தை திரையில் பார்க்கும்போது கிடைக்கிற பரவச நிலை நிச்சயமாக வேறெதிலும் கிடைக்காது. கர்ணன் படம் ஹிட்டடித்த ஜோரில் யாரோ புண்ணியவான் திருவிளையாடல் படத்தையும் கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பார்த்து ரிலீஸ் செய்திருக்கிறார். உட்ரா வண்டிய என உட்லாண்ட்ஸ் தியேட்டருக்கு அரக்க பரக்க ஓடினோம். தியேட்டருக்கு போய்ச்சேரும்போதே மணி ஆறேமுக்கால் கால்மணிநேர படம் முடிந்துவிட்டிருந்தது. அந்த கால்மணிநேரத்தில் கைலாய மலையின் புகை மண்டிய ஓப்பனிங் சீனும், சிவபெருமான் சிவாஜிசாரின் ஓப்பனிங்கும் , நாரதர் ஞானப்பழம்கொண்டு வந்து சிவபெருமான் ஃபேமிலியில் கும்மி அடிப்பதும்.. அதனால் கடுப்பான குன்றேறி குமரன் பட்டையும் கொட்டையுமாக பழனிமலைமேல் ஏறிக்கொள்வதும்.. அவரை இறக்க அவ்வையார் போவதும் மிஸ்ஸாகிவிட்டது. உள்ளே நுழைந்து சீட் நம்பர் பார்த்து அமரும் போதுதான்.. நாமறிந்த அவ்வையாரான கே.பி.சுந்தராம்பாள் குன்றின் மேல் கோவணத்தோடு நிற்கும் குமரனுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார். தியேட்டர் ஹவுஸ்ஃபுல் என்பது அந்த இருட்டிலும் தெரிந்தது. பாட்ஷா படத்தில் ரஜினிசார் ‘’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’’ என்று சொன்னதும் ரசிகர்கள் விசிலடித்து சிலிர்த்து கைதட்டி மகிழ்வார்களே அதே போல கேபிசுந்தராம்பாள் ‘’பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா..’’ என பாட ரசிகர்கள் சிலிர்த்துக்கொண்டதை பார்க்க தமாஷாக இருந்தது. பல்லுப்போன தாத்தா பாட்டிகள் நிறைய பேர் பேரன் பேத்திகளோடு உற்சாகமாக கைத்தட்டி பாடலை தாளம்போட்டு ரசித்துக்கொண்டிருந்தனர். தியேட்டர் முழுக்க ஏகப்பட்ட சிவாஜி ரசிகர்கள். பக்தர்கள். அவ்வையார் முருகனை கூல் பண்ணமுடியாமல் கடுப்பாகி ‘’உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கோ உரிமையுண்டூ...’’ என்றெல்லாம் சொல்லி டிரைப்பண்ணி வேலைக்கு ஆகாமல் பாடிபாடி டயர்டாகி வீட்டுக்கு கிளம்பிவிடுகிறார். பார்வதி தேவியான சாவித்திரி பச்சை பெயின்டில் வந்து முருகனை சாந்தப்படுத்த உன் அப்பாவின் திருவிளையாடல்களை சொல்கிறேன் கேள் என்று ஃப்ளாஷ்பேக்கை ஓப்பன் பண்ணுகிறார். கட் பண்ணினால் மதுரை. தேவிகாவுக்கு ஒரு ஓப்பனிங் சாங்.. ‘’பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்’’ . செம பாட்டு.. குட் லிரிக்ஸ்.. சூப்பரான கலர்ஸ். தேவிகா அவ்வளவு அழகு. என்னதான் சாமிப்படமாக இருந்தாலும் கமர்ஷியல் காரணங்களுக்காக ஒரு குளியல் குமால்டிங்கான சீனையும் சொருகியிருக்கிறார் இயக்குனர். ம்ம்.. டிவைன். (பல வருடங்களாக தொங்கிப்போயிருந்த பல பெரிசுகளின் துவண்ட நெஞ்சுகள் தேவிகாவை பார்த்ததும் குபுக்கென குமுறியிருக்கும் என்பது மட்டும் உறுதி!..) பாட்டு முடிந்ததும் பாண்டியமன்னனான முத்துராமன் வருகிறார். கீழோர் மறப்பர் மேலோர் நினைப்பர் என்கிற பாட்டுக்கு என்ன அர்த்தம் சொல்லு என தேவிகாவிடம் சொல்லி.. அதற்கு ஒரு சூப்பர் விளக்கமும் கொடுக்கிறார். அப்படியே பேச்சுவாக்கில் போகிற போக்கில் உன் கூந்தலுக்கு இயற்கையில் மணமா செயற்கையில் மணமா என சந்தேகத்தை எழுப்பி.. அதுக்கு பரிசுகொடுக்கிறேன் என தண்டோரா போட.. படத்தின் இன்னொரு சூப்பர் ஸ்டாரான நாகேஷ் என்ட்ரி! ஸ்பான்டேனியஸ் என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. நிறைய இங்கிலீஸ் விமர்சனங்களில் படித்திருக்கிறேன், அதை எங்காவது உபயோக்கிக்க வேண்டும் என நினைத்ததுண்டு. நாகேஷ்தான் அந்த வார்த்தைக்கேற்ற நடிகர். அடேங்கப்பா என்ன ஒரு ஆக்டிங். மண்டபத்தில் பாட்டெழுதி கொடுக்கும் சிவபெருமானிடம் அவர் பண்ணுகிற சேட்டைகள்.. ஒரிஜினல் சிவபெருமானே ரசித்து சிரித்திருப்பார். அவ்வளவு ஸ்பான்டேனியஸ்! ஸ்கிரீன் பிரசென்ஸில் சிவாஜியை அடித்துக்கொள்ள முடியாது.. அவரையே தூக்கி சாப்பிட்டு முழுங்கி ஏப்பம் விடுகிறார் நாகேஷ். என்ன மாதிரியான ஒரு கலைஞன்.. ஆற்றாமையையும் வறுமையையும் இயலாமையையும் ஏழ்மையையும் இன்னும் நிறைய மைகளையும் ஒருங்கே தன்னுடைய முகத்திலும் பாடிலேங்வேஜிலும் காட்டி அசத்துகிறார். சிம்ப்ளி சூப்பர்ப்! அவருடைய அந்த தருமி போர்ஷனுக்காகவே படத்தை பத்துமுறை பார்க்கலாம். நாகேஷுக்கு பிறகு அவருடைய திரைவிழுங்குகிற தன்மை வடிவேலுவுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. தருமி கதை முடிந்ததும், தாட்சாயினி கதை தொடங்குகிறது. தட்சனின் யாகத்தில் ஏதோ அவில்பாகம் (அப்படீனா என்ன யாராவது விளக்கலாம்) குடுக்கவில்லையென சிவபெருமான் காண்டாகி தாட்சாயிணியோடு சண்டையிட்டு போரிட்டு வாயிலிருந்து கற்பூரத்தை வரவைத்து தாட்சாயிணியை எரித்து சாம்பலாக்கி ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இப்பாகம் முழுக்க சிவாஜிசாரின் செம பர்பாமென்ஸ்.. அதிலும் தாட்சாயணியை போ போ என விரட்டும்போது அரங்கம் அதிர்கிறது. விசில் பறக்கிறது. சிவாஜி ரசிகர்கள் தெயவ்மே என சிலிர்க்கிறார்கள். சிவமில்லையேல் சக்தியில்லை சக்தியில்லையேல்சிவமில்லை என்பதை உலகுக்கு உணர்த்த சூப்பரான டான்ஸ் ஒன்றை ஆடுகிறார் சிவன்ஜி! அவருக்கு நடனம் சரியாக வராது என்பது உலகறிந்த செய்தி என்பதால் எடிட்டரும் நடன இயக்குனரும் ஓவர் டைம் பார்த்து அந்த காட்சியை செதுக்கியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சின்ன சின்ன ஷாட்டுகள்.. ஒவ்வொரு நடன அசைவுக்கு ஒரு ஷாட்.. நடனம் தொங்கலாக இருக்குமிடங்களிலெல்லாம் கேமரா ஆடுகிறது.. சிகப்பு விளக்கு எரிகிறது.. எப்படியோ ஒப்பேற்றி அந்த நடனத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். இடைவேளை. (உச்சா போய்விட்டு வந்து பப்ஸ் வாயோடு தோழரிடம் சிவாஜிசாரை நக்கலடித்து சிரித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அருகில் இருந்தவர் ஒருமாதிரியாக முறைத்துப் பார்த்துக்கொண்டேயிருந்தார். அடித்துவிடுவாரோ என்றுகூட தோன்றியது. கண்டுக்காமல் சிவாஜிக்கு தொப்பைய பாத்தீங்களா பாஸ்.. சாவித்திரிக்கு அதவிட பெரிய தொப்பை என நக்கல் பண்ணிக்கொண்டிருந்தோம்.. திடீரென அந்த மர்ம நபரின் செல்ஃபோன் ஒலித்தது.. ‘’இதோ எந்தன் தெய்வம் முன்னாலே..’’ தோழர் அரண்டுபோய்விட்டார். இந்த பாட்டை ரிங்டோனாக வைத்திருப்பவர் நிச்சயம் சிவாஜி வெறியராகத்தான் இருக்கவேண்டும்.. ஓடிடுவோம்.. என்றார். அவர் சொல்லிமுடிப்பதற்குள் நான் என் சீட்டில் இருந்தேன்) அடுத்தது மீனவர் கதை. இதில் மீனப்பெண்ணாக பிறந்த பார்வதியை மணமுடிக்க எல்லா சேட்டைகளும் செய்கிறார் சிவபெருமான். வயசுப்பொண்ணை கையபுடிச்சு இழுக்கிறார். எல்லாமே ரஜினி ஸ்டைல். நடை,சிரிப்பு,சண்டைபோடும் ஸ்டைல்,ரொமான்ஸ் என எல்லாமே ரஜினிகாந்த் செய்துகிறாரே அச்சு அசல் அதே அதே!. (சந்திரமுகி கிளைமாக்ஸில் வருகிற வேட்டையபுரம் மகாராஜா செய்வதைப்போலவே செம வில்லத்தனம் காட்டுகிறார் சிவாஜி!) ரஜினியின் ஸ்டைலை சிவாஜிசார் நிறையவே பாதித்திருக்கிறார் என்பதை படத்தின் இந்த பாகத்தில் உணரலாம். பஸ்ட் ஆஃப் ஆக்சன் காமெடி சென்டிமென்ட் என்றால் செகன்ட் ஆஃப் மியூசிக்கல். கிட்டத்தட்ட ஆறு பாட்டு! எல்லாமே அற்புதம். பாட்டும் நானே பாவமும் நானே.. தொடங்கி கிளைமாக்ஸ் அவ்வையாரின் ஒன்றானவன் இரண்டானவன் பாடல் வரைக்கும்.. பாடல்களுக்கு நடுவில்தான் காட்சிகள்! முதல் பாதியில் நாகேஷ் என்றால் இரண்டாம் பாதியில் பாலைய்யாவும் டிஆர் மகாலிங்கமும்.. ‘’இஷைத்தமிழ் நீ ஷெய்த அருஞ்ஷாதனை’’ என அவர் பாடத்தொடங்க.. ஏஆர் ரஹ்மான் லைவ் இன் கான்செர்ட்டில் தில்சேரே.. என பாடும் போது கரகோஷங்கள் எழுமே அதைவிட அதிகமான கரவொலி. ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என ரசிகர்கள் துள்ளுகிறார்கள். சில இடங்களில் கொஞ்சம் பழைய ஸ்டைல் ஆக்டிங்கால் டிஆர் மகாலிங்கம் சமகால டிஆர் போல சிரிக்க வைத்துவிடுகிறார் (தட்ஸ் ஓக்கே). ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை.. நான் அசைந்தால் அசையும் அகிலமெலாமே என பாடி புரியவைக்கிறார் சிவாஜி. பிறகு பாணபத்திரருக்கு காட்சி தந்து ஒருவழியாக ஃபிளாஷ்பேக் முடிந்துவிடுகிறது. மூன்று கதைகளை கேட்டபிறகு நான்காவது கதையை சொல்ல தொடங்கிவிடுவாரோ என்கிற பயத்திலோ என்னவோ முருகன் கூல் டவுன் ஆகிறார். சிவபெருமான் தோன்றி நீ அமர்ந்த இந்த மலை பழம்நீ என்று விளங்கட்டும் என அருள்பாலிக்கிறார். பழனிமலை எப்படி உருவானது என்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன் என்று புரிகிறது. விநாயகர்,சிவபெருமான்,பார்வதி,முருகன் என குடும்பத்தோடு குன்றில் மேல் நிற்க.. அந்த வழியாக வரும் அவ்வையாரை கூப்பிட்டு சிவபெருமான் ஒன்று இரண்டு மூன்று என என்னை வாழ்த்தி பாடு என ஜாலியாக பாடவைத்து மகிழ்கிறார். படம் முடிகிறது! தமிழ்சினிமாவில் சிவபெருமானாக ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மனோகர் தொடங்கி ஏஎம் ராஜன்,விகே ராமசாமி, கேப்டன் விஜயகாந்த்,ரஜினிகாந்த்,கமலஹாசன் வரைக்கும் பலரும் நடித்த கேரக்டர்தான் என்றாலும்.. மேச்சோவான நடிகராக போற்றப்படும் சிவாஜி அப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும்போது சிவபெருமானுக்கே ஒரு கம்பீரமும் உக்கிரமும் வந்துவிடுகிறது. வெர்சடைலான நடிப்பில் அசத்தும் சிவாஜிசாருக்கு நவரச நடிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது இந்தப்படத்தில். தருமியில் காமெடி, தாட்சாயிணியிடம் ரஜினிஸ்டைல் ‘’பொம்பளை பொம்பளையா இருக்கணும்’’ ஆண்மைத்திமிர், நக்கீரரிடம் கோபம், மீனவ பெண்ணிடம் ரொமான்ஸ்,ருத்ர தாண்டவ டான்ஸ், பார்த்தா பசுமரம் என குத்துப்பாட்டுக்கு லோக்கல் டான்ஸ், திமிங்கலத்தோடு வீரம் என கலவையான நடிப்பு.. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். பாட்டும் நானே பாடலிலும் அதற்கு முந்தையா பிந்தைய காட்சிகளிலும் சிவாஜிசாரின் நடிப்பை பாராட்ட எனக்கு வயது பத்தாது! படத்தின் வசனகர்த்தா மாபெரும் தமிழ் இலக்கிய பேராசிரியாக இருக்கவேண்டும். எல்லாமே கிளாசிக். இன்றைக்கும் தமிழகத்தின் எங்காவது மூலையில் யார்வாயிலாவது இப்படத்தின் வசனங்கள் உச்சரிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. சிவபெருமானுக்கான டயலாக்குகள் எல்லாமே டாப்டக்கர். அன்றைக்கு இருந்த தொழில்நுட்பங்களையும் கிராபிக்ஸ் உத்திகளையும் பயன்படுத்தி எடுத்திருந்தாலும் இறுதியில் சிவாஜி,நாகேஷ்,சாவித்திரி,பாலையா.டிஆர் மகாலிங்கம் மாதிரியான மாபெரும் நடிகர்களின் நடிப்புக்கு முன்னால் சுமாரான கிராபிக்ஸோ, வரைந்து வைத்திருக்கும் அரங்க அமைப்புகளோ ஒரு குறையாகவே தெரியவில்லை. கேவி மகாதேவனின் இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஏற்கனவே சொன்னதுபோல அவருடைய இசைதான் இரண்டாம் பாதி முழுக்க படத்தை காப்பாற்றுகிறது. என்னதான் பக்திப்படமாகவே இருந்தாலும், காமெடி,சென்டிமென்ட்,ஆக்சன்,ரொமான்ஸ்,கவர்ச்சி என எல்லாமே கலந்த கலவையாக ஒரு நல்ல மசாலா படம் பார்த்த திருப்தியை தருகிறது திருவிளையாடல். டிவியில் பார்க்கும்போது கிடைக்காத ஒரு உற்சாகமும் மனநிறைவும் தியேட்டரில் பார்க்கும் போது தொற்றிக்கொள்கிறது. நீங்கள் நாத்திகரோ ஆத்திகரோ சிவபெருமான் மேல் நம்பிக்கையிருக்கோ இல்லையோ, சிவாஜி ரசிகரோ இல்லையோ.. நிச்சயம் இப்படம் உங்களை மகிழ்விக்கும் என்பது மட்டும் நிச்சயம். வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் தியேட்டரில் பாருங்க!
திருவிளையாடல் - புராணப் படங்களில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்த படம்.
ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய் கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம் ஆகவே எனது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்.
சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்.
ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர், எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தாங்க. பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.
குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. என்னப்பா பண்ணலாம்? என்று கேட்டார்.
அய்யா! நான் குதிரைக் காரன்..., எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன் என்றான்.
பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு சபாஷ் போட்டுட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப்படுத்திட்டார் குரு. பிரசங்கம் முடிஞ்சுது. எப்படிப்பா இருந்தது என் பேச்சு? என்று அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.
அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்! என்றான். அவ்ளோதான்... குரு தெறிச்சிட்டார்!
*நீதி:-*
மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும், புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் !!!
நள்ளிரவு ஒரு மணி, நகரின் ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் கார்பார்க்கிங்கில் காரை பார்க் செய்து விட்டு, லிப்டை நோக்கி போனார்கள் அந்த மூன்று இளைஞர்களும்....
லிப்ட் ரிப்பேர் சார்!... சரி செய்ய இரண்டு நாளாகும் என்று வாட்ச்மேன் சொன்னதை கேட்டு திகைத்துப் போனார்கள்..., காரணம் அவர்கள் வீடு ஐம்பதாவது மாடியில் இருக்கிறது.....
வேறு வழியில்லை..., படியில் நடந்தேயாக வேண்டிய சூழ்நிலை..., மூன்று பேரும் ஆளுக்கொரு கதை சொல்லிக்கொண்டே, அலுப்பு தெரியாமல் நடந்து செல்வதென, முடிவெடுத்தனர்.
முதலாமவன் ஓரு காமெடி கதை சொன்னான். கதை முடிய இருபத்தைந்தாவது மாடிக்கு வந்து விட்டார்கள். இரண்டாவது ஆள் ஒரு ரொமான்ட்டிக் காதல் கதை சொன்னான். கதை முடிய நாற்பத்தியெட்டாவது மாடிக்கு வந்துவிட்டார்கள்.
இப்பொழுது மூன்று பேரும் தொப்பலாய் நனைந்து போய் மூச்சு வாங்கினார்கள். மூன்றாவது ஆளிடம், நண்பா நாம வீடு வர்றதுக்கு இன்னும் இரண்டு மாடிதான் இருக்கு, அதற்குள் முடியிற மாதிரி ஒரு குட்டி கதை சொல் என்றார்கள்.
அவன் சொன்னான், ஒரே வரியில் முடிகிற மாதிரி ஒரு திகில் கதை இருக்கு...! அதுவும் உண்மைக் கதை...! சொல்லவா? என்றான்....!
இருவரும் ஆர்வத்துடன், சொல்லுடா என்றார்கள்..! அவன் சொன்னான்...
பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று தன் வாகனத்தில் வெள்ளை மாளிகைக்கு சென்றுக் கொண்டு இருந்த போது முன் இருக்கையில் அவரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் அமர்ந்து இருந்தார். பில் கிளிண்டன் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தாராம்... வாகனம் திடீரென நின்று விட்டது காரணம் பெட்ரோல் இல்லை...
உடனே அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வாகனம் கொண்டு செல்லப்பட்டது. ஒருவர் பெட்ரோல் போடுகிறார். பெட்ரோல் போட்டு முடித்தவுடன் அந்தப் பெட்ரோல் போட்ட ஊழியர் காரின் கண்ணாடியைத் தட்டி முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஹிலாரி கிளிண்டனிடம் ஹிலாரி *How are you?* என்று கேட்க பதிலுக்கு ஹிலாரியும் *I'm fine* என்று சொன்னாராம்! கண்ணாடி ஏற்றப்பட்டு வாகனம் புறப்பட்டது. பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பில் கிளிண்டன் ஆச்சரியத்துடன் தன் மனைவி ஹிலாரியைப் பார்த்துக் கேட்டாராம்... ஹிலாரி நீ ஒரு அமெரிக்க அதிபரின் மனைவி மற்றும் வெள்ளை மாளிகையில் குடியேறப் போகும் அதிர்ஷ்டசாலி... இந்த சாதாரண பெட்ரோல் பங்க் ஊழியரை உனக்கு எப்படித் தெரியும் என்றாராம்.
அதற்கு ஹிலாரி கிளிண்டன் சொன்னாராம் ஓ... அதுவா அவன் என்னுடைய கிளாஸ்மேட் அவன் பெயர் அலெக்சாண்டர். அவன் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். பள்ளியில் நன்றாகப் படிப்பவன். அது மட்டுமல்ல என்னை அதிகமாக நேசிப்பவன். என்ன செய்ய காலத்தின் சூழ்நிலை அவன் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்கிறான் என்றாராம். வாகனம் போய்க் கொண்டே இருக்கிறது. பில் கிளிண்டன் ஹிலாரியிடம் கிண்டலாக, ஒருவேளை உன்னை அதிகமாக நேசித்த அவனை நீ நேசித்து திருமணம் செய்து இருந்தால் இன்றைக்கு பெட்ரோல் பங்க் ஊழியரின் மனைவியாக இருந்திருப்பாய், அப்படித் தானே ஹிலாரி என்றாராம்...
அதற்கு ஹிலாரி சொன்னாராம், அப்படி அல்ல மிஸ்டர் பில் கிளிண்டன்! அந்த அலெக்சாண்டர் அமெரிக்க அதிபராக இருந்து இருப்பான்! நீர் வேறு எங்கேயாவது ஊழியராக இருந்திருப்பீர் என்றாராம்! பல நேரங்களில் மனைவியின் திறமைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்! ஆனால் நாம் கெத்தோடும் சந்தோசத்தோடும் வாழ்வது நம் துணையினால் தான் என்பதை மறந்து விடக்கூடாது!
கழுத்தில் *தாலி* ஏறும் வரை யாரென்று தெரியாமலேயே தன்னையே ஒப்படைத்து அவருடன் வாழ்க்கைப் பயணங்களைத் தொடங்கும் பெண்ணை விடவா *தன்னம்பிக்கைக்கு* வேறு உதாரணம் இருந்து விடப் போகிறது...??
யாருனே தெரியாத ஓருத்தங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு மாட்டிக்கிட்டு முழிக்கிற ஆண்களைவிட வா ஏமாளி க்கு உதாரணம் வேணும்......