Friday, May 4, 2018

சாய் சத்சரிதம் அத்தியாயம் 01

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 01

நமஸ்காரங்கள் - பாபா கோதுமை மாவு அரைத்த நிகழ்ச்சியும் அதன் தத்துவ உட்கருத்தும்

புராதனமானதும், மிக்க மரியாதையை உள்ளதுமான வழக்கத்தின்படி, ஹேமத்பந்த், இந்த சாயி சரித்திரத்தைப் பல்வேறு நமஸ்காரங்களுடன் எழுத ஆரம்பிக்கிறார்.

1. முதலில் எல்லாவித இடையூறுகளை நீக்குதற் பொருட்டாகவும், தன் பணி வெற்றியுறவும் "ஐந்து கரத்தனை யானை முகத்தனை" மிக்கப் பணிவுடன் தலை தாழ்த்தி வணங்குகிறார். ஸ்ரீ ஷீர்டி சாயியே, கணபதி என்றும் கூறுகிறார்.

2. பின்னர் தன் மனத்திலே உதித்த எண்ணங்களை உயர்த்தி உணர்வூட்ட தம் தாய் சரஸ்வதியை நமஸ்கரிக்கிறார். ஸ்ரீ சாயி அறிவின் தெய்வமே என்றும், அவரே தன் வாழ்க்கை கீதத்தை அழகுடன் பாடுகிறார் என்றும் கூறுகிறார்.

3. ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத் தொழிலையும் முறையே நிகழ்த்தும் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரையும் வணங்கி சாயிநாதர் அவர்களுடன் ஒன்றானவர் என்றும், சம்சாரம் என்னும் ஆற்றினை நாம் தாண்ட, நம்மைச் சுமந்து செல்வதில் மாபெரும் சத்குரு என்றும் விளம்பி,

4. பின்னர் பரசுராமரால் கடலினின்று உயர்த்தப்பட்ட கொங்கண தேசத்தில் அவதரித்துத் தம்மைக் காக்கும் தம் குலதெய்வமான நாராயண் ஆதிநாத் மற்றும் குடும்பத்தின் ஆதிபுருஷரையும் நமஸ்கரித்து,

5. பின்னர் தனது கோத்திரத்தில் அவதரித்த பரத்வாஜ முனிவரையும், பல்வேறு ரிஷிகளான யக்ஞவல்க்யர், பிருகு, பராசரர், நாரதர், வேதவியாசர், ஜனகர், ஜனந்தனர், ஜனத்குமாரர், சுகர், சௌனகர், விஸ்வாமித்ரர், வசிஷ்டர், வால்மீகி, வாமதேவர், ஜைமினி, வைசம்பாயனர், நவயோகீந்திரர் முதலியோரையும் நவீன மகான்களாகிய நிவ்ருத்தி, ஞானதேவர், சோபான், முக்தாபாய், ஜனார்த்தனர், ஏக்நாத், நாமதேவர், துகாரம், கனகர், நரஹரி முதலானோரையும் பணிந்து தலைவணங்கி,

6. பிறகு தனது தாத்தாவான சதாசிவரையும், தகப்பனாரான ரகுநாதரையும், தம் இளம் வயதில் மறைந்த அன்னை மற்றும் அவரை வளர்த்த அத்தை, அன்பிற்குரிய அண்ணன் ஆகியோரையும் வணங்கி,

7. பின்னர் படிப்பவர்களை வணங்கி, தமது பணிக்கு முழு அன்பையும், சிதையாத கவனத்தையும் கொடுத்தருள வேண்டிக்கொண்டு,

8. கடைசியாக தனது ஒரே அடைக்கலமும், பிரம்மமே மெய்ப்பொருள், பாரனைத்தும் மாயத்தோற்றம் என்று தனக்கு உணர்விக்கின்ற ஸ்ரீதத்தாத்ரேயரின் அவதாரமான சத்குரு ஸ்ரீ சாயிபாபா அவர்களை நமஸ்கரித்து, அங்ஙனமே எம்பெருமான் வதியும் எல்லா ஜீவராசிகளையும் வணங்கித் துதிக்கின்றார்.

பராசரர், வியாசர், சாண்டில்யர் முதலியோரது கருத்தின்படி பக்தியால் பலகாலும் துதித்தவற்றைச் சுருக்கமாகக் கூறிய பின்பு ஆசிரியர் பின்வரும் நிகழ்ச்சியை விவரிக்கிறார்.

1910 ஆம் ஆண்டிற்குப்பின், எப்போதோ ஒருநாள் நல்ல காலை நேரத்தில் மசூதிக்கு சாயிபாபாவைத் தரிசிப்பதற்காகச் சென்றிந்திருந்தேன். பின்வரும் நிகழ்ச்சியைக் கண்ட நான் ஆச்சர்யத்தால் தாக்கப்பட்டேன். தமது முகம், வாய் இவற்றைக் கழுவிய பின்பு, சாயிபாபா கோதுமை மாவு அரைக்கத் தயார்படுவதில் முனைந்தார். ஒரு சாக்கைத் தரையில் விரித்து அதன்மேல் திருகையை வைத்தார். பின்பு முறத்தில் கொஞ்சம் கோதுமையை எடுத்து தம் கஃனியின் கைகளை மடக்கிவிட்டுக்கொண்டு கையளவு கோதுமையை திருகைக் குழியில் இட்டார். திருகையைச் சுற்றி கோதுமையை அரைக்கத் தொடங்கினார். பிச்சை எடுத்து வாழ்ந்து, எவ்வித உடைமையும் சேமிப்பும் அற்ற இவர் கோதுமை மாவு அரைக்க வேண்டிய அவசியமென்ன என்றவாறு நினைத்தேன். அங்குவந்த சிலரும் அவ்வாறே எண்ணினார்கள். ஆயின், ஒருவருக்கும் பாபா என்ன செய்கிறார் என்று கேட்கத் துணிவு வரவில்லை.

பாபா மாவரைக்கும் இச்செய்தி உடனே கிராமத்தில் பரவி ஆண்களும், பெண்களும் பாபாவின் செய்கையைக் காணப் பெருந்திரளாக மசூதிக்கு வந்தனர். கூட்டத்திலிருந்த தைரியம் உள்ள நான்கு பெண்மணிகள் வலிய நுழைந்து, பாபாவை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, திருகையின் கைப்பிடியைப் பற்றி பாபாவின் லீலைகளைப் பாடியவாறு மாவரைக்கத் தொடங்கினர்.

முதலில் பாபா கடுங்கோபம் அடைந்தார். ஆயின், அந்தப் பெண்மணிகளின் அன்பையும், பக்தியையும் கண்டு மிக்க சந்தோஷம் அடைந்து புன்னகை புரியலானார். அவர்கள் அவ்வாறு அரைத்துக் கொண்டிருக்கையில் "பாபாவுக்கு வீடோ, பிள்ளைகளோ அன்றி அவரைக் கவனிக்க வேறு யாருமே இல்லையாதலாலும் அவர் பிச்சை எடுத்து வழ்ந்தவராதலாலும் அவருக்கு ரொட்டி செய்ய கோதுமை மாவு தேவையிருக்கவில்லை, எனவே இவ்வளவு மாவை என்ன செய்வார்? ஒருவேளை பாபா அன்பாயிருக்கும் காரணத்தால், இம்மாவை நமக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுவார்." என்றவாறு எண்ணமிட்டபடி, பாடியவாறே அரைத்து முடித்து, திருகையை ஓரத்தில் நகர்த்திவிட்டு, கோதுமை மாவை நான்கு பிரிவாகப் பிரித்து ஆளுக்கு ஒவ்வொரு பகுதியாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினார்கள்.

இதுவரை அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்த பாபா கோபமடைந்து, "பெண்களே! உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? யாருடைய அப்பன் வீட்டுப் பொருளை இவ்வாறு அபகரிக்கிறீர்கள். நீங்கள் தடங்கல் இன்றி மாவை எடுத்துச் செல்வதற்கு நான் முன்னம் உங்களிடம் கடன் பட்டிருக்கிறேனா என்ன? தயவுசெய்து இப்போது இதைச் செய்யுங்கள், இம்மாவை எடுத்துச்சென்று கிராம எல்லைகளில் கொட்டிவிட்டு வாருங்கள்" என்றார். இதைக் கேட்டபின் அவர்கள் வெட்கமடைந்து தமக்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு கிராம எல்லைக்குச் சென்று பாபா குறிப்பிட்டபடி அங்கே மாவைப் பரப்பிவிட்டார்கள்.

பாபா செய்த இவைகளெல்லாம் என்னவென்று ஷீர்டி மக்களை வினவினேன். காலரா நோய் கிராமத்தில் பரவிக்கொண்டு இருப்பதாயும், இது அதையே எதிர்க்க பாபாவின் பரிகாரமாகும் என்றும் கூறினர். கோதுமை அரைக்கப்படவில்லை, காலராவே அரைக்கப்பட்டு கிராமத்திற்கு வெளியில் கொட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியின் பின்னர் காலரா மறைந்து கிராம மக்கள் மகிழ்ச்சியுற்றனர். நானும் இவற்றையெல்லாம் அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அதே சமயம் எனக்கு ஆச்சரியம் விளைந்தது. காலராவுக்கும், கோதுமை மாவுக்கும் பூவுலகில் உள்ள ஒற்றுமை யாது? சாதாரணமாக அவைகளுக்கு உள்ள உறவு என்ன? அவை இரண்டையும் எங்ஙனம் இணைக்க முடியும்? இந்நிகழ்ச்சி விவரிக்க இயலாததாய் இருக்கிறது. நான் இதைப்பற்றிச் சிறிது எழுதி என் மனம் நிறைவடையும்வரை பாபாவின் இனிக்கும் லீலைகளைப் பாடுவேன்.

இந்த லீலையைப் பற்றி இவ்வாறாக எண்ணமிட்டபின் என் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது. இங்ஙனம் நான் பாபாவின் வாழ்க்கை வரலாறான சத்சரிதத்தை எழுத உணர்சியூட்டப்பட்டேன்.

பாபாவின் அருளுடனும், ஆசியுடனும் இப்பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்பதையும் நாமறிவோம்.

மாவரைத்ததன் தத்துவ உட்கருத்து

ஷீர்டி மக்கள் இந்நிகழ்ச்சியை ஒட்டி அமைந்த காரணத்தைத் தவிர வேறு ஒரு தத்துவ உட்கருத்தும் இருப்பதாக நாம் நினைக்கிறோம். சாயிபாபா ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் ஷீர்டியில் வாழ்ந்தார். இந்நீண்ட காலத்தில் அவர் பெரும்பாலும் தினசரி அரைத்தார். கோதுமையை மாத்திரமன்று பாவங்கள், உள்ளம் - உடல் ஆகியவற்றின் துன்பங்களையும், கணக்கில்லாத் தன் அடியவர்களின் துயரங்களையும் அரைத்துத் தீர்த்தார்.

கர்மம், பக்தி என்ற இரண்டு கற்கள் அவர் திருகையில் இருந்தது. முன்னது கீழ் கல்லாகும். பின்னது மேற் கல்லாகும். பாபா பிடித்து அரைத்த கைப்பிடி ஞானமாகும். சத்துவம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்களைச் சேர்ந்த நமது எல்லா உணர்சிகள், ஆசைகள், பாவங்கள், அஹங்காரம் இவைகளை நிகளந்துக்களாக்கி முன்னோடி வேலையாக அரைக்கப்பட்டாலன்றி ஞானம் அல்லது தன்னை உணர்தல் என்பது முடியாதென்பது பாபாவின் உறுதியான தீர்ப்பாகும். இக்குணத்தைத் தள்ளிவிடுவது அத்தகைய கடினமானது. ஏனெனில் அவைகள் அவ்வளவு நுட்பமானவை.

கபீரின் ஒரு நிகழ்ச்சியை இது ஞாபகமூட்டுகிறது. ஒரு பெண்மணி சோளத்தை அரைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு அவர் தன் குரு நிபத்னிரன்ஜனிரிடம், "திருகையில் இடப்பட்ட சோளத்தைப் போன்று இவ்வுலக வாழ்க்கை என்னும் திருகையாலே நசுக்கப்படும்போது நான் அஞ்சுவதனால் அழுகிறேன்" என்று கூறினார். நிபத்னிரன்ஜனர் "பயப்படாதே, நான் செய்வது போல் இத்திருகையில் உள்ள ஞானமென்னும் பிடியைப் பிடித்துகொள். அதிலிருந்து நெடுந்தூரம் சென்று திரியாதே. ஆயின் உட்புறமாகத் திரும்பு அப்போது நீ காப்பாற்றப்படுவது நிச்சயம்" என்று பதிலளித்தாராம்.

ஸ்ரீ சாயியைப் பணிக அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

No comments:

Post a Comment