ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 11
சகுணப் பிரம்மமாக சாயி
டாக்டர் பண்டிட்டின் வழிபாடு
ஹாஜி சிதிக்ஃபால்கே
பஞ்சபூதங்களின்மேல் பாபாவின் கட்டுப்பாடு
இந்த அத்தியாயத்தில் பிரம்மத்தின் அவதாரமான (சகுணப் பிரம்மமான) சாயியை விளக்குவோம். அவர் எங்ஙனம் வழிபட்டார். எங்ஙனம் அவர் பஞ்சபூதங்களை (இயற்கைச் சக்திகளை) கட்டுப்படுத்தினார் என்பதையும் காண்போம்.
சகுணப் பிரம்மமாக சாயி
கடவுளுக்கு அல்லது பிரம்மத்திற்கு இரண்டுவிதமான வழிபாடுகள் உண்டு.
1. அவதரிக்காத நிர்குண வழிபாடு
2. அவதரித்த சகுண வழிபாடு
இரண்டும் ஒரே பிரம்மத்தைக் குறித்தாலும் நிர்குணம் உருவமற்றது. சகுணம் உருவமுள்ளது. சிலர் முன்னதையும், சிலர் பின்னதையும் வழிபடுவதை விரும்புகிறார்கள். கீதையில் (அத். 12) கூறியதைப்போன்று சகுணப் பிரம்மவழிபாடு எளிதானதானதும், ஆரம்பகாலத்திற்கு உகந்ததுமாகும். மனிதனுக்கு உருவம் இருப்பதைப்போன்று (உடம்பு, உணர்வுகள் முதலியன) உருவத்துடன் கூடிய கடவுளை வழிபடுவது அவனுக்கு இயற்கையானதும், எளிதுமாகிறது. சகுணப்பிரம்மத்தை சில குறிப்பிட்ட காலக்கூறுவரை வணங்கினாலொழிய நமது அன்பும், பக்தியும் அபிவிருத்தியுறாது. நாம் முன்னேறும்போது அது நம்மை நிர்குணப் பிரம்மத்தை வழிபட (தியானிக்க) இட்டுச்செல்கிறது.
எனவே, நாம் சகுண வழிபாட்டுடன் ஆரம்பிப்போமாக! உருவம், யாககுண்டம், தீ, ஒளி, சூரியன், நீர், பிரம்மம் ஆகிய ஏழும் வழிபாட்டுக்குரியவை. எனினும், சத்குருவே இவை எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தவர். பற்றின்மையும், அவதாரமும், முழு மனதார்ந்த தமது அடியவர்களின் உறைவிடமுமான சாயியை இத்தருணத்தில் நினைவு கூர்வோமாக. அவர் மொழிகளில் நமக்குள்ள நம்பிக்கையே ஆசனமாகும். நமது சங்கல்பமாவது (பூஜையை ஆரம்பிக்கும்போது சொல்லும் தெளிந்த தீர்மானம்) நமது ஆசைகள் அனைத்தையும் உதறித் தள்ளுதலாகும். சிலர், சாயி ஒரு பாகவதபக்தர் (கடவுளின் அடியவர்) என்று கூறுகின்றனர். மற்றும் சிலர், மஹாபாகவத் (பெரும் அடியவர்) என்றும் பகர்கின்றனர். ஆனால் நமக்கு அவர் கடவுளின் அவதாரமாவார். அவர் எல்லையற்ற அளவு மன்னிப்பாரகவும், கோபமற்றவராகவும், நேர்மையுள்ளவராகவும், மென்மையாளராகவும், சகிப்புத்தன்மை உடையவராகவும், இருந்தார். அவர் உருவமுள்ளவராகத் தோன்றினாலும், உண்மையில் உருவம் அற்றவராகவும், உணர்ச்சி வேகமற்றவராகவும், பற்றற்றவராகவும், அந்தரங்கமாய் சுதந்திரமாகவும் இருந்தார்.
கங்கை நதி, தான் கடலுக்குச்செல்லும் வழியில் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்ட ஜீவராசிகளுக்குக் குளிர்ச்சியளித்து, புதுக்கிளர்ச்சியூட்டி, பயிர்களுக்கும், மரங்களுக்கும் உயிரையளித்து, பலரின் தாகத்தையும் தணிக்கிறது. இதைப்போன்றே சாயி போன்ற புண்ணிய புருஷர்கள் (ஆத்மாக்கள்) வாழ்ந்துகொண்டிருக்குபோதே அனைவருக்கும் துயராற்றி, ஆறுதல் நல்கிறார்கள். கிருஷ்ண பரமாத்மாவும், "ஞானி எனது ஆத்மா, எனது வாழும் உருவம், நான் அவரே, அவரே எனது தூய வடிவம்" என்று கூறியிருக்கிறார். சத்து - சித்து - ஆனந்தம் என அறியப்படும் இந்த விவரிக்க இயலாத ஆற்றல் அல்லது கடவுளின் சக்தியே ஷீர்டியில் சாயி என்னும் ரூபத்தில் அவதரித்தது.
ஸ்ருதி (தைத்திரீய உபநிஷதம்) பிரம்மத்தை ஆனந்தம் என விவரித்திருக்கிறது. இதை நாம் தினந்தோறும் நூல்களில் படிக்கிறோம் அல்லது கேட்கிறோம். ஆனால் இப்பிரம்மத்தை அல்லது பேரானந்தத்தை ஷீர்டியில் பக்த மஹாஜனங்கள் அனுபவிக்கிறார்கள். அனைவருக்கும் ஆதாரமான அவருக்கு எவரிடமிருந்தும் எந்த ஆதாரமும் தேவையிருக்கவில்லை. ஒரு சாக்குத்துண்டையே எப்போதும் தமது ஆசனமாகக் கொண்டிருந்தார். பக்தர்களால் அது ஒரு மெல்லிய மெத்தைகொண்டு மூடப்பட்டிருந்தது. அவர் சாய்ந்துகொள்ள முதுகிற்கு ஒரு திண்டும் அவர்களாலேயே வைக்கப்பட்டது.
பாபா தமது அடியவர்களின் எண்ணங்களை மதித்தார். அவர்கள் விருப்பப்படியே தம்மை வழிபட அவர்களை அனுமதித்தார். அவர் முன்னிலையில் சிலர் சாமரம் அல்லது விசிறி வீசினர். சிலர் இசைக் கருவிகள் வாசித்தனர். சிலர் அவரின் கைகளையும், கால்களையும் கழுவினர். இன்னும் சிலர் வெற்றிலை, பாக்கு மற்றும் பல பொருட்களையும் நைவேத்யமாகச் சமர்ப்பித்தனர். ஷீர்டியில் அவர் வாழ்ந்ததுபோல் தோன்றினாலும் அவர் எங்கும் வியாபித்திருந்தார். அவரின் எங்குநிறை தன்மையை அவருடைய பக்தர்கள் தினந்தோறும் உணர்ந்தார்கள். இவ்வாறாக எங்கணும் வியாபித்திருக்கின்ற (சர்வாந்தர்யாமி) சத்குருவுக்கு நமது பணிவான சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
டாக்டர் பண்டிட்டின் வழிபாடு
ஒருமுறை தாத்யா சாஹேப் நூல்கரின் நண்பரான டாக்டர் பண்டிட் என்பவர் ஷீர்டிக்கு பாபாவின் தரிசனத்துக்காக வந்தார். பாபாவை வணங்கியபின் மசூதியில் அவர் சிறிதுநேரம் அமர்ந்திருந்தார். பாபா, அவரைத் தாதாபட் கேல்கரிடம் செல்லுமாறு பணித்தார். தாதாபட்டிடம் அவர் சென்றார். தாதாபட் அவரை நன்கு வரவேற்றார். தாதாபட் பூஜைக்காக தனது வீட்டைவிட்டுப் புறப்பட்டார். அவருடன் டாக்டர் பண்டிட்டும் சென்றார். தாதாபட் பாபாவை வழிபாடு செய்தார். இதுகாறும் எவரும் பாபாவின் நெற்றிக்குச் சந்தனம் பூசத் துணிந்ததில்லை.
மகால்சாபதி மட்டுமே பாபாவின் கழுத்தில் சந்தனம் பூசுவது வழக்கம். ஆனால் எளிய மனதுடைய இவ்வடியவரான டாக்டர் பண்டிட் பூஜைப்பொருட்கள் வைத்திருந்த டாக்டர் தாதாபட்டின் பாத்திரத்தை எடுத்துப்போய் அதிலிருந்து பிசையப்பட்ட சந்தனத்தை எடுத்து திரிபுந்த்ரா எனப்படும் திருநீற்றுப் பட்டையை பாபாவின் நெற்றியில் இட்டார். பாபா, எல்லோருக்கும் வியப்பையளிக்கும் வகையில், ஒரு வார்த்தைகூடக் கூறாமல் அமைதியாய் இருந்தார்.
அன்றுமாலை தாதாபட் பாபாவிடம், "நெற்றியில் சந்தனம் பூசுவதை நீங்கள் தடுத்துக்கொண்டிருந்தாலும் இப்போது டாக்டர் பண்டிட் அங்ஙனம் செய்ததைத் தாங்கள் எப்படி அனுமதித்தீர்கள்?" என்று கேட்டார். இதற்கு பாபா, டாக்டர் பண்டிட் தம்மை (பாபாவை) அவரது குருவான காகாபுராணிக் என்று அழைக்கப்பட்ட தோபேஸ்வரைச் சேர்ந்த ரகுநாத் மஹராஜ் என்று நம்பியிருந்ததாகவும், அவர் குருவுக்கு செய்துகொண்டிருந்ததைப் போன்றே தமது நெற்றியிலும் சந்தனம் பூசியதாகவும் தெரிவித்தார். எனவே பாபாவால் தடுக்க இயலவில்லை. டாக்டர் பண்டிட்டிடம் விசாரித்ததில் பாபாவைத் தனது குரு காகாபுராணிக் என்று கருதியதாகவும் அதே மாதிரியாகவே அவரை உணர்ந்ததாகவும் கூறினார். எனவே அவர் தனது குருவுக்குச் செய்வதைப்போன்றே திரிபுந்த்ரத்தை பாபாவின் நெற்றியிலும் இட்டார்.
பக்தர்கள் விரும்பியவாறே தம்மை வழிபட பாபா அவர்களை அனுமதித்தார். எனினும் சில சமயங்களில் அவர் விநோதமானமுறையில் நடந்துகொண்டார். சில சமயங்களில் பூஜைத்தட்டைத் தூக்கியெறிந்து சீற்றமே அவதரித்ததுபோல் நின்றிருப்பார். அப்போது அவரை எவரே அணுக முடியும்? சில சமயங்களில் அவர் பக்தர்களைக் கடிந்தார். சில சமயங்களில் மெழுகைக்காட்டிலும் மென்மையாய் இருந்தார். சாந்தத்துக்கும், மன்னிப்புக்குமான ஓர் உருவமாய் இருந்தார். கோபத்தால் அவர் குலுங்குவதுபோல் தோன்றினாலும், அவரது சிவந்த கண்கள் சுற்றிச்சுற்றி உருண்டாலும் அவர் அந்தரங்கமாக, பாசத்தின் தாரையாக, தாயன்பு உடையவராக இருந்தார்.
உடனே தமது அடியவர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் தாம் ஒருபோதும் கோபமாக இருந்ததே இல்லை எனக்கூறி, தாயார் தங்களது குழந்தைகளை உதைத்தார்களானால், கடலானது ஆறுகளைப் புறக்கணித்ததென்றால் தாமும் அடியவர்களின் நலன்களை அலட்சியம் செய்வேன் எனவும் பகர்ந்தார். தமது பக்தர்களின் அடிமையான அவர் எப்போதும் அவர்களுக்கு ஆதரவாய் இருப்பதையும், அவர்கள் தம்மை அழைக்கும்போதெல்லாம் மறுமொழி கூறி அவர்களின் அன்பைப் பெறுவதற்குமே எப்போதும் அவர் பெரிதும் விரும்பினார்.
ஹாஜி சிதிக்ஃபால்கே
பாபா எப்போது ஓர் அடியவரை ஏற்றுக்கொள்வார் என்பதை அறியமுடியாது. அது அவரது இனிய சங்கல்பத்தையே பொறுத்தது. இக்கூற்றுக்கு சிதிக்ஃபால்கேயின் நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு. கல்யாணைச் சேர்ந்த சிதிக்ஃபால்கே என்ற ஒரு முஹமதியப் பெருந்தகை மெக்கா, மெதீனாவுக்குப் புனித யாத்திரை செய்துவிட்டு ஷீர்டிக்கு வந்தார். வடக்கு நோக்கிய சாவடியில் அவர் வாழ்ந்தார். மசூதியின் திறந்த வெளியில் அவர் அமர்ந்தார். ஒன்பது மாதங்கள் பாபா அவரைப் பொருட்படுத்தவில்லை. அவரை மசூதிக்குள் நுழையவும் அனுமதிக்கவில்லை. பால்கே மிகவும் தேற்றவியலாத நிலையை எய்தி என்னசெய்வதென்று புரியாமலிருந்தார். யாரோ ஒருவர் அவரை ஏமாற்றமடைய வேண்டாமென்றும், பாபாவின் மிக நெருங்கிய, அருகில் உள்ள அடியவரான ஷாமா (மாதவ்ராவ் தேஷ்பாண்டே) மூலம் பாபாவை அணுக முயற்சிக்கும்படியும் ஆலோசனை கூறினார். சிவபெருமான், அவரது சேவகரும், பக்தருமான நந்தியின் மூலம் அணுகப்படுதலைப்போல, ஷாமாவின் மூலம் பாபா அணுகப்படுதல் வேண்டும் என்றும் கூறினார். ஃபால்கே இந்த யோசனையை விரும்பி, ஷாமாவைத் தனக்காக மன்றாடிக் கெஞ்சிக் கேட்குமாறு வேண்டினார்.
ஷாமாவும் சமத்தித்து, பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்தில் பாபாவிடம், "பாபா, பலர் இம்மசூதிக்குள் தாராளமாய் வந்து தங்கள் தரிசனத்தைப் பெற்றுப் போகும்போது, தாங்கள் ஏன் அந்த முதிர்ந்த ஹாஜியை மசூதிக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது? அவரை ஒருமுறை ஆசீர்வதித்தருளலாகாதா?" என்று அவரைப்பற்றிப் பேசினார். அதற்கு பாபா, "ஷாமா, நீ விஷயங்களையெல்லாம் புரிந்துகொள்ள இயலாத அளவு முதிர்சியற்றவனாய் இருக்கிறாய். ஃபக்கீர் (அல்லா) அனுமதிக்கவில்லைஎன்றால் நான் என்ன செய்யமுடியும்? அவரது அருளின்றி யாரே மசூதியில் ஏற வல்லார்? நன்று, அவரிடம் சென்று நாளை பார்வி கிணற்றுக்கருகிலுள்ள குறுகிய ஒற்றையடிப்பாதைக்கு வருவாரா எனக்கேட்டுவா" என்றார். ஷாமா சென்று உடன்பாட்டு விடையுடன் திரும்பிவந்தார்.
மீண்டும் அவரிடம் பாபா, "எனக்கு நாற்பதாயிரம் ரூபாய்களை நான்கு தவணைகளில் கொடுக்கச் சம்மதிப்பாரா எனக் கேள்" என்றார். சாமா சென்று, நாற்பது இலட்சம் ரூபாய்கள் கூடத் தர அவர் சம்மதிப்பதான பதிலுடன் திரும்பிவந்தார். மீண்டும் பாபா, "நாங்கள் ஒரு ஆட்டை மசூதியில் வெட்டப்போகிறோம், அவரை அதன் மாமிசம், தொடை, விதை இவைகளில் எது வேண்டுமெனக்கேள்" என்று கூறினார். ஹாஜி, பாபாவின் கோலாம்பாவிலிருந்து (மட்பாண்டத்திலிருந்து) ஏதாவது ஒரு சிறுதுணுக்கை பெற்றுக்கொள்வதிலேயே மகிழ்வதாகவும் ஷாமா பதில் கொண்டுவந்தார்.
இதைக்கேட்டு பாபா உணர்ச்சிவசப்பட்டு, தமது கையால் மட்கூஜாக்களையும், கோலாம்பாவையும் விட்டெறிந்துவிட்டு, நேராக ஹாஜிடம் சென்று தமது கஃப்னியை கைகளால் பிடித்துக்கொண்டு "ஏன் உன்னை நீயே தற்பெருமைப்படுத்தி உயர்வாகக் கற்பனை செய்துகொண்டு முதிர்ந்த ஹாஜியைப்போல் பாவனை செய்துகொண்டிருக்கிறாய். குர்ஆனை நீ இவ்விதமாகத்தான் கற்றுணர்ந்தாயா? நீ உனது மெக்கா தலயாத்திரை குறித்துப் பெருமை கொள்கிறாய். ஆனால் நீ என்னை அறியவில்லை" என்றார். இவ்வாறு கடிந்துகொள்ளப்பட்டதும் ஹாஜி குழப்பமடைந்தார். பாபா பின்னர் மசூதிக்குச் சென்று ஒரு கூடை மாம்பழங்களை வாங்கி ஹாஜிக்குக் கொடுத்தனுப்பினார். பின்னர் மீண்டும் ஹாஜியிடத்துச் சென்று தம் பையிலிருந்து ரூ.55 ஹாஜியின் கைகளில் கொடுத்தார். அதிலிருந்து பாபா ஹாஜியை விரும்பினார். உணவுக்கு அவரை அழைத்தார். பாபா ஹாஜியை விரும்பியபோதெல்லாம் மசூதியினுள் அழைத்தார். பாபா சில சமயங்களில் அவருக்கு சில ரூபாய்கள் அளித்தார். இவ்வாறாக பாபாவின் தர்பாரில் ஹாஜியும் சேர்க்கப்பட்டார்.
பஞ்சபூதங்களின் மேல் பாபாவின் கட்டுப்பாடு
பஞ்சபூதங்களின் மேல் பாபாவின் ஆணைக்கு ஈண்டு உதாரணமாக இரண்டு நிகழ்சிகளைக் கூறி இந்த அத்தியாயத்தை முடிப்போம்.
(1) ஒருநாள் மாலைநேரத்தில் ஷீர்டியில் பயங்கரமான புயல் வீசியது. கருமேகங்களால் வானம் திரையிடப்படிருந்தது. காற்று பலமாக வீசத்தொடங்கியது. மேகங்கள் கர்ஜித்து மின்னல் பளிச்சிட்டது. மழை வெள்ளமாய்ப் பொழியத் தொடங்கியது. சிறிதுநேரத்தில் அவ்விடம் முழுவதும் வெள்ளக்காடாகியது. ஷீர்டியிலிருந்த சர்வ ஜந்துக்களும், பறவைகளும், மிருகங்களும், மனிதர்களும் பயங்கர பீதியடைந்து திரளாக மசூதியில் தஞ்சமடைந்தனர். ஷீர்டியில் பல கிராம தேவதைகள் இருக்கின்றன. ஆனால் அவைகளில் எவையும் அவர்களின் உதவிக்கு வரவில்லை. எனவே அவர்கள் எல்லோரும் தங்களது பக்தியின்பால் பற்றுமீதூறும் தங்களது கடவுளான பாபாவை, அவர் குறுக்கிட்டுப் புயலைத் தணிக்க வேண்டினர். பாபா மிகவும் மனது உருகினார். பாபா மசூதியிலிருந்து வெளிப்போழ்ந்து அதன் விளிம்பில் நின்று, பெருத்த இடிமுழக்கம் போன்ற குரலில் புயலை நோக்கி, "நிறுத்து, உன் சீற்றத்தை நிறுத்தி அடங்கியிரு" எனக் கூறினார். சில நிமிடங்களில் மழை குறைந்து, காற்று வீசுவது நின்று, புயலும் அடங்கியது. பின்னர் சந்திரன் வானத்தில் உதயமாகி, மக்கள் நன்றாக மகிழ்வெய்தி வீடிட்ற்குத் திரும்பினர்.
(2) மற்றொரு சந்தர்ப்பத்தில் மத்தியான நேரத்தில் மசூதியில் துனியில் உள்ள நெருப்பு பிரகாசமாக எரியத் தொடங்கியது. அதனுடைய சுவாலை மசூதியின் விட்டத்தை அடைந்தது. மசூதியில் அமர்ந்திருந்த மக்களுக்கு என்னசெய்வதென்றே புரியவில்லை. தண்ணீரை அதன்மீது ஊற்றும்படியோ,அல்லது சுவாலையைத் தணிப்பதற்கு வேறெதுவும் செய்யும்படியாகவோ பாபாவைக் கேட்க அவர்களுக்குத் துணிவு வரவில்லை. ஆனால் சிறிதுநேரத்தில் பாபா, என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை உணரத் தலைப்பட்டார். தமது சட்காவை எடுத்து முன்னுள்ள ஒரு தூணின்மீது ஓங்கியடித்து, "கீழிறங்கு, அமைதியாய் இரு" என்றார். ஒவ்வொரு அடிக்கும் சுவாலை கீழிறங்கத் தொடங்கி சில நிமிடங்களில் குறைந்து துனி அமைதியாகவும், சாதாரணமாகவும் ஆகியது.
இவரே நமது சாயி - கடவுளின் அவதாரமாவார். தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதியடைந்த எந்த மனிதரையும் அவர் ஆசீர்வதிக்கிறார். தினந்தோறும் பக்தியுடன் இவ்வத்தியாயத்தைப் படிப்பவர்கள் எல்லாக் கேடுகளில் இருந்தும் விடுபடுவார்.
இதுமட்டுமன்று, எப்போதும் சாயியின் மேல் பக்தியுடையவராகவும், அன்புடையவராகவும் இருந்து வெகுவிரைவில் கடவுள்காட்சியைப் பெறுவார். எல்லா ஆசைகளும் நிறைவேறியவராக, அவாவற்றவராக இறுதியில் உயர்நிலை எய்துவார்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்
Very fine. Can I get all chapters of Sri Sai Satcharitra in words document please.
ReplyDeleteஓம் ஸ்ரீசாயிராம்
Sri sairam
ReplyDelete