Monday, August 2, 2021

குட்டி கதை - உதவி

காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கம்பெனியின் ஓய்வு அறைக்குள் நுழைந்துவிட்டது. பதட்டத்துடன் இருந்த அந்த புலி அந்த அறையின் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் சத்தம் போடாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது.

நான்காவது நாள், பசி தாங்க முடியாமல், ஓய்வு அறைக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் காணாமல் போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது, யாருமே கண்டு கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி. அவர் அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர்.அவரையும் யாரும் தேடவில்லை, கண்டு கொள்ளவும் இல்லை. 

இதனால் குளிர்விட்டுப் போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது.
அடுத்த நாள் வழக்கம்போல் ஒரு நபரை அடித்துக் கொன்றது அந்த புலி. அவர் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் பியூன். அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்கு வருவதற்காக பிளாஸ்கை கழுவ அந்த அறைக்குள் வந்திருக்கிறார்.

சிறிது நேரத்தில், காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லையே என்று மொத்த அலுவலகமும் சல்லடை போட்டு தேடியது. நெடுநேர தேடுதலுக்குப் பின் ஓய்வு அறைக்குள் உயிரிழந்து கிடந்த பியூனையும், அந்த புலியையும் கண்டுபிடிக்கிறார்கள். புலி பிடிபடுகிறது.

நீதி‬:-

உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ, வசதி வாய்ப்போ அல்ல. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்

அந்தப் புலிய எங்க ஆஃபீஸ் கிச்சனுக்கு அனுப்புங்களேன்...

No comments:

Post a Comment